உலகம்

ஒரே ஆண்டில் வறுமைக்கோட்டுக்கு கீழே சென்ற 1.25 கோடி மக்கள் - பரிதாப நிலையில் பாகிஸ்தான் !

கொரோனா பெரும் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன் -ரஷ்யா போர் ஆரம்பமாகி மீண்டும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அதிகரித்தது.

அதிலும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டது. அந்த நாட்டில் அடிப்படை உணவுக்கே தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைத்த நிலையில் கிட்டத்தட்ட இலங்கைக்கு நேர்ந்த நிலையைதான் தற்போது பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. போதிய வரி வருவாய் இல்லாத நிலையில், மக்களின் அடிப்படை தேவைகளை பாகிஸ்தான் அரசால் நிறைவேற்றமுடியவில்லை

பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பு கிட்டத்தட்ட காலியானதாக கூறப்பட்ட நிலையில், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக உலகவங்கி, ஐஎம்எப் ஆகிய நிறுவனங்களிடம் கையேந்தி வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தானில் கடந்த ஓராண்டில் மட்டும் 1.25 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே சென்றுவிட்டதாக உலக வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் டோபியாஸ் ஹக், "கடந்த ஒரு நிதி ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் புதிதாக 1.25 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே வந்துள்ளனர். இதனால் அந்த நாட்டில் மொத்தம் 9.5 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு இணையான பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளைவிட மக்களின் வாழ்க்கைத் தரம் அங்கு மோசமான அளவில் சரிந்துள்ளது. அங்கு பொருளாதாரம் இன்று மிகவும் கவலை தரக்கூடியதாக இருக்கிறது. இதனால், பொருளாதாரத்தோடு மனித வளர்ச்சியும் கவலை தரக்கூடியதாக உள்ளது" என்று கூறியுள்ளார்.

Also Read: 'சந்திரயான் 3' : நிலவில் பதியாத இந்திய தேசிய சின்னம்.. காரணம் என்ன ? விளக்கிய இஸ்ரோ தலைவர் !