உலகம்

வீட்டில் கிடைத்த கொடூர ஆயுதங்கள்.. பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்படுகிறதா இம்ரான் கானின் கட்சி ?

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது, கடந்த அண்டு ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டு வந்தன. பல்வேறு எதிர்புகளுக்கு மத்தியில் அந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இம்ரான் கான் பதிவி விலகி எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. தற்போது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் பிரதமராக இருந்து வருகிறார். அவரின் அரசுக்கு பெரிய கட்சிகளில் ஒன்றான பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு அளித்து வருகிறது.

இம்ரான் கானுக்கு எதிராகவும் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. மேலும் அவரை எம்.பி. பதவியில் இருந்தும் தகுதி நீக்கம் செய்ய பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்துமாறு கட்சித் தொண்டர்களுக்கும், இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் அவரது கட்சி அழைப்பு விடுத்தது.

அதனை ஏற்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் பேரணி ஒன்று நடைபெற்றது. இந்த பேரணியில் திடீரென மர்ம நபர்கள் சிலர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தனது பதவிக்காலத்தில் வெளிநாட்டு பிரமுகர்கள் வழங்கிய பரிசுகளை சட்டவிரோதமாக விற்றதாக குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான் ஆஜராகாத நிலையில் அவருக்கு மாவட்ட நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்தது. இதனால் இம்ரான் கைதாவதை தடுக்க லாகூரில் ஜாமன் பூங்கா பகுதியில் உள்ள வீட்டில் அவரது கட்சி தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.

இதனால் அவர்களை களைக்க ஆயுதம் ஏந்திய 10 ஆயிரம் போலிஸார் குவிக்கப்பட்டனர். பின்னர் இம்ரான் வீட்டை சுற்றி இருந்த தொண்டர்கள் அடித்து விரட்டிய போலிஸார் புல்டோசர் மூலம் இம்ரான் வீட்டின் கதவை இடித்து தள்ளி உள்ளே புகுந்தனர்.

மேலும் வீட்டில் இருந்த தொண்டர்களையும் அடித்து விரட்டிய போலிஸார் அங்கிருந்த பெட்ரோல் வெடிகுண்டுகள், ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இந்த விவகாரம் பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிற் நிலையில், இம்ரான் கானின் வீட்டில் இருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால் அவரின் கட்சியை பயங்கரவாத அமைப்பாக கருதி அதனை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் சனாவுல்லா, "இம்ரான் கானின் கட்சி பயங்கரவாத அமைப்பு என்று கூறி வருகிறோம். அதற்கு அவரின் ட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களே சாட்சி. எந்தவொரு அரசியல் கட்சியையும் தடை செய்வதற்கு நீதிமன்ற ஒப்புதல் அவசியம்.இதனால், இம்ரான் கட்சியை தடை செய்வது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி விரைவில் இது குறித்து முடிவு செய்யப்படும்" என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் பாகிஸ்தானின் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: லண்டன் இந்திய தூதரகத்தில் அப்புறப்படுத்தப்பட்ட இந்திய தேசிய கொடி.. காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம் !