உலகம்

ஊழியர்களுக்கு கொடுக்க காசு இல்லை.. இதுக்கு மட்டும் இருக்கோ?-மெட்டா நிறுவனத்தை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

தற்போதுள்ள இந்த இணைய உலகில், நாம் அனைத்தையும் இணையவழியாகவே பெற முடிகிறது. தகவல் பரிமாற்றம் கூட நம்மால் இணைய வழியில் எளிமையாக செய்ய முடிகிறது. இது போன்ற செயலிகள் வெறும் தகவல் பரிமாற்றத்துடன் நின்றுவிடாமல், வீடியோ காலிங், போட்டோ வீடியோ பகிர்தல், வாய்ஸ் காலிங் வசதிகள் உள்ளிட்டவையும் பெற்றுள்ளது.

இது போன்ற செயலிகளை உலகளவில் பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் 19 ஆண்டுகளுக்கு முன்னர் மார்க் ஜூக்கர்பர்க்கால் தொடங்கப்பட்ட பேஸ்புக் நிறுவனம் தற்போது இந்த சமூகவலைதள உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

பேஸ்புக் நிறுவனம் தனது சேவையோடு நிறுத்திகொள்ளாமல் வாட்ஸ்அப் போன்ற போட்டி நிறுவனங்களை வாங்கி மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. மேலும், தனக்கு கீழ் செயல்படும் பேஸ்புக், வாட்ஸ்அப் ,இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்களை ஒருங்கிணைத்து மெட்டா என்ற தாய் நிறுவனத்தை உருவாக்கினார் மார்க் ஜூக்கர்பர்க்.

இந்த மெட்டா நிறுவனத்தின் வருவாய் காரணமாக உலகபணக்காரர் வரிசையில் மார்க் ஜூக்கர்பர்க் இடம்பெற்றுள்ளார். மேலும், உலகின் முக்கிய நபர்களில் ஒருவராக இதன்மூலம் மார்க் ஜூக்கர்பர்க் உயர்ந்துள்ளார். இதனால் அவரின் பாதுகாப்புக்காக 10 மில்லியன் டாலர்களை மெட்டா நிறுவனம் செலவு செய்கிறது.

இந்த நிலையில், மெட்டா நிறுவனம் மார்க் ஜூக்கர்பர்க்கின் பாதுகாப்பு தொகையை 14 மில்லியன் டாலர்களாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வரும் ஆண்டு முதல் இந்திய ரூபாய் மதிப்பில் 33 கோடி ரூபாய் அதிகமாக மார்க் ஜூக்கர்பர்க்கின் பாதுகாப்புக்கு செலவிடப்படவுள்ளது.

மெட்டா நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வருவாய் இழப்பை காரணம் காட்டி 12000 ஊழியர்களை ஓரே நேரத்தில் பணிநீக்கம் செய்த நிலையில், தற்போது அதன் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க்கின் பாதுகாப்புக்கு அதிக தொகையை ஒதுக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பலரும் மெட்டா நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: சிங்கப்பூர் நிறுவனம் மூலம் பங்குசந்தையில் மோசடி.. போர்ப்ஸ் பத்திரிகை ஆய்வில் சிக்கிய அதானியின் சகோதரர் !