உலகம்

அடுத்ததாக SnapChat-ஐ வாங்கப்போகிறாரா எலான் மஸ்க்? -இணையத்தில் வலம்வரும் ட்வீட்டால் அதிர்ச்சி !

உலகின் பிரபலமான சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் முழுமையாகக் கைப்பற்றப் போவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே ஒருவழியாக ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மஸ்க் ஆகியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான கையோடு ட்விட்டரில் தலைமை நிதி அதிகாரி நெட் சேகல், CEO பராக் அகர்வால், சட்டத்துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல் என உயர் அதிகாரிகள் பலரையும் அடுத்தடுத்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கிட்டத்தட்ட 50 % ட்விட்டர் ஊழியர்களுக்கு பணிநீக்க செய்தி அனுப்பப்பட்டுள்ளது. எலான் மஸ்க்கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.அதைத் தொடர்ந்து ட்விட்டர் ஊழியர்களை நேரடியாக சந்தித்த எலான் மஸ்க், வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதோடு இதற்கு ஒப்புக் கொண்டால் மட்டும் வேலைக்கு வரலாம் என்றும், உங்கள் ராஜினாமாக்களை நாங்கள் தாராளமாக ஏற்றுக் கொள்வோம் என்றும் கூறியுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேநேரம் அதிக நேரம் பணிபுரியவேண்டும் என்ற எலான் மஸ்க்ன் கோரிக்கைக்கு ட்விட்டர் ஊழியர்கள் பகிரங்கமாகவே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பலர் ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக எலான் மஸ்க் மற்றொரு சமூகஊடகமான ஸ்நாப்சாட்டை வாங்கப்போவதாக தகவல் வெளியானது. ஸ்நாப்சாட்டை தான் வாங்கப்போவதாக எலான் மஸ்க் ட்விட் செய்தது போல ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதன் காரணமாக சமூகவலைத்தளம் பரபரப்பானது.

இந்த நிலையில், அந்த புகைப்படம் போலியானது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அந்த போலி புகைப்படத்தில் இருக்கும் நாளில் எலான் மஸ்க் அப்படி எந்த ட்வீட்யும் செய்யவில்லை என்பது சோதனை செய்ததில் தெரியவந்தது. சமீப நாட்களாக எலான் மஸ்க் பரபரப்பாக பேசப்படும் நபராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வீடியோ எடுத்த இளைஞர்களை தாக்கிய செவிலியர்கள்.. வெளியான பதறவைக்கும் வீடியோ.. பீகாரில் அதிர்ச்சி !