
கடல்சார் பாதுகாப்பில் தனது உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு சென்னை கடற்கரைப் பகுதிகளை பாதுகாக்க “கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப்படை” (Marine Elite Force) ஒன்றை ரூ.96.00 லட்சம் தொடக்க நிதிஒதுக்கீட்டுடன் அமைத்துள்ளது.
இந்த முன்னோடி முயற்சியானது, 2025–2026 நிதியாண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் 28.03.2025 அன்று வனத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
சென்னை வன உயிரின கோட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப்படை, சுற்றுச் சூழல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் பகுதிகளில் கரையோர ரோந்து, கண்காணிப்பு மற்றும் சட்ட அமலாக்கப் பணிகளுக்கான சிறப்புப் பிரிவாக செயல்படும். குறிப்பாக அழிவின் விளிம்பில் உள்ள ஆலிவ்ரிட்லி
கடல் ஆமை, டால்பின்கள் மற்றும் கடற்பசு போன்ற பாதுகாக்கப்பட்ட கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதிலும், வன உயிரின (பாதுகாப்பு) சட்டம், 1972-இன் விதிகளை அமல்படுத்துவதிலும் இப்படை முக்கிய கவனம் செலுத்தும்.
சென்னை கடற்கரை முழுவதும், குறிப்பாக கரையிலிருந்து ஐந்து கடல் மைல் வரையிலான எல்லைக்குள், தொடர்ச்சியான ரோந்து பணி மேற்கொள்ளப்படும். சட்டவிரோத மீன்பிடிப்பு மற்றும் வன உயிரின குற்றங்களுக்கு எதிராக எவ்வித சமரசமும் இல்லாத அணுகுமுறை கடைப்பிடிக்கப்படும். நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெறும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளின் முக்கியமான முட்டையிடும் மற்றும் குஞ்சு வெளிவரும் காலகட்டத்தில், சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதுடன், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் பெருவாரியான உயிரிழப்புகளை சமாளிக்க விரைவு நடவடிக்கை செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படும்.
ஒவ்வொரு படகும் வனச்சரக அலுவலர் தலைமையில் வனவர், வன பாதுகாவலர்கள், கடல்சார் காவலர்கள் மற்றும் கடல்சார் படகு ஓட்டுநர்கள் என மொத்தம் 12 பணியாளர்களை உள்ளடக்கியதாகும் மேலும் இப்படையானது கள மேற்பார்வை, செயலாக்கம் மற்றும் கடல்சார் செயல்பாட்டு நிபுணத்துவம் ஆகிய பயனுள்ள பணிகள் மேற்கொள்வதை உறுதி செய்யும்.
இப்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில், நவீன ரோந்து படகு, ஆழ்கடல் கண்காணிப்பிற்கான நீர்மூழ்கி ட்ரோன்கள் மற்றும் களப்பணிகளை பதிவு செய்யும் உடலில் அணியக்கூடிய புகைப்படக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், திறம்வாய்ந்த கரையோர பாதுகாப்பை உறுதிப்படுத்த, அதிநவீன தொடர்பு சாதனங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் களப்பணிக்கான தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப்படையின் பணியாளர்கள், கடல் சூழலை பாரம்பரியமாக அறிந்த மீனவ சமுதாயத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடல் சூழலியல் கண்காணிப்பு, கடல்வாழ் உயிரினங்களை அடையாளம் காணுதல் மற்றும் அதிநவீன கண்காணிப்பு கருவிகளை கையாளுதல் ஆகியவற்றில் சிறப்பு பயிற்சிகளை பெற்றுள்ளனர்.
இந்த கடல்சார் உயரடுக்கு பாதுகாப்புப்படையை டிச.18 ஆம் தேதி வனத்துறை மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார்.






