உலகம்

திடீரென்று 8 மணி நேரம் முடங்கிய INSTAGRAM சேவை.. மன்னிப்பு கேட்ட நிறுவனம்.. ஏன் தெரியுமா ?

நவீன உலகில் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தகவல்கள் பரிமாற்று விஷயங்களுக்கு புதிதாக ஆப் கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதலில் முகநூல், வாட்சப் பயன்படுத்துவது போல், தற்போது இன்ஸ்டாகிராமும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

அதன்படி தற்போது வாட்சப், டிவிட்டர், முகநூலுக்கு அடுத்தப்படியாக இளைஞர்கள் அதிகளவில் பயன்படுத்தும் சமூகவலைதளமாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது. இந்த இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்சப்பை முகநூல் நிறுவனமான மெட்டா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாட்சப், இன்ஸ்டாகிராமை வாங்கியது.

மெட்டா நிறுவனத்தின் கைக்கு இன்ஸ்டாகிராம் சென்றதில் இருந்து பல்வேறு update களை வழங்கி வருகிறது. அந்நிறுவனம். அந்த வகையில் ரீல்ஸ், ஸ்டோரி உள்ளிட்டவை பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

அதே நேரம், இது போன்ற சமூக வலைதளங்கள் ஒரு சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென்று முடங்கிப்போவது உண்டு. இதனால் பயனர்கள் சிறிது நேரம் அவதிக்குள்ளாவர். அந்த வகையில் அண்மையில் கூட வாட்சப் சேவை அக்டோபர் 25-ம் தேதி திடீரென சில மணி நேரம் முடக்கப்பட்டது. இதற்கான விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு நோட்டீஸும் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு இன்ஸ்டாகிராம் செயலி உலகளவில் திடீரென முடங்கியது. இதனால் பயனர்கள் கடும் அவதிக்குள்ளானர். மேலும் இது தொடர்பாக ட்விட்டர் போன்ற மற்ற சமூக வலைதளம் மூலம் புகார் தெரிவித்தனர். மேலும் சில பயனர்கள் தங்களது கணக்குகள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தங்களுக்கு செய்தி வந்ததாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து புகார் குறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனம், "உங்களில் சிலருக்கு உங்கள் Instagram கணக்கை அணுகுவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம், சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்திருந்தது.

உலகளவில் சுமார் 8 மணிநேரம் முடங்கிய இன்ஸ்டாகிராம் சேவை தீவிர முயற்சிகளுக்கு பிறகு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து, "இந்த பிழையை நாங்கள் இப்போது தீர்த்துவிட்டோம் - இது உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் கணக்குகளை அணுகுவதில் சிக்கல்களை ஏற்படுத்தியது மற்றும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் சிலருக்கு தற்காலிக மாற்றத்தை ஏற்படுத்தியது. மன்னிக்கவும்! " என்று குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்துள்ளது.

சுமார் 8 மணி நேரம் இன்ஸ்டாகிராம் முடங்கியதால் அதன் பயனாளர்கள் மிகவும் குழப்பத்தில் இருந்ததோடு, சிரமத்திற்கு உள்ளானர். முன்னதாக கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 3 முறை இன்ஸ்டாகிராம் முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: திருமண தடை நீங்க வேண்டும்.. - போலி மந்திரவாதியின் பேச்சை கேட்டு சிறுமியை வன்கொடுமை செய்த ஆசிரியர் !