உலகம்

எலிசபெத் ராணி மறைவால் சிக்கலில் மாட்டிய 600 நிறுவனங்கள்.. பரபரப்பில் இங்கிலாந்து ! பின்னணி என்ன ?

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நலக்குறைவால் சில நாட்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர் காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது.இவரின் மறைவை அடுத்து உலக தலைவர்கள் ராணி எலிசபெத்துக்கு இரங்கல் தெரிவித்தனர்.

அவரின் இறுதி சடங்கு இன்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் உலகத்தலைவர்கள் பலர் பங்கேற்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணி எலிசபெத் இறந்ததையடுத்து பிரிட்டன் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கிறது. மேலும் அந்நாட்டு மக்கள் பக்கிங்காம் அரண்மனை முன்பு குவிந்து வருகின்றனர். ராணி எலிசபெத் உடலுக்கு படத்த பாதுகாப்புடன் இன்று இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. அவரது உடலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

இந்த நிலையில் எலிசபெத் ராணியின் மரணம் காரணமாக சுமார் 600 நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் அரச குடும்பங்கள் பயன்படுத்தும் பொருள்களை உற்பத்தி செய்யப்படும் நிறுவனங்களுக்கு அரசர், அரசி, அல்லது இளவரசர் ஆகியோர் ராயல் முத்திரையை வழங்குவார்கள்.

அரச குடும்பம் கொடுக்கும் இந்த முத்திரையை நிறுவனங்கள் அதிமுக்கியமான கருதுவார்கள். பல்வேறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருப்பதே இந்த அரச முத்திரை தான். அரச குடும்பம் பயன்படுத்தும் பொருள் என்பதால் மக்களுக்கு அது தரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அதனை வாங்குவார்கள்.

தற்போது மறைந்த ராணி சுமார் 600 நிறுவனங்களுக்கு இந்த முத்திரையை வழங்கியுள்ளார். தற்போது அவர் மரணமடைந்துள்ளதால் அந்த நிறுவனங்கள் இரண்டு ஆண்டுக்குள் அந்த முத்திரையை தங்கள் பொருள்களில் இருந்து நீக்க வேண்டியிருக்கும். அல்லது புதிய அரசர்,இளவரசரிடம் அந்த முத்திரையை பெறவேண்டும். இதனால் அந்த நிறுவனங்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Also Read: அசைந்தாடிய ரயில்,இடிந்து விழுந்து பள்ளிக்கூடம்.. தைவான் நிலநடுக்கத்தின் கோரமான வீடியோ காட்சிகள் வெளியீடு!