உலகம்

29 நாய்கள் சுட்டுக் கொலை.. கத்தார் நாட்டில் நடந்த கொடூர சம்பவம்: விலங்கு ஆர்வலர்கள் கண்டனம்!

கத்தார் நாட்டின் தலைநகரான தோகாவில் Paws Rescue Qatar என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இவர்களின் வேலை என்னவென்றால் கைவிடப்பட்ட நாய்கள் மற்றும் தெரு நாய்களை மீட்டுப் பராமரித்து வருவதுதான்.

இந்நிலையில் அவர்கள் தொண்டு நிறுவனத்தில் பராமரிக்கப்பட்டு வந்த நாய் ஒன்று அருகே உள்ள குடியிருப்புக்குள் நுழைத்து சிறுவனைக் கடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் குடும்பத்தினர் அத்துமீறி தொண்டு நிறுவனத்திற்குள் நுழைந்து கண்ணில்பட்ட நாய்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இந்த தாக்குதலில் மட்டும் 29 நாய்கள் உயிரிழந்துள்ளன. இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு விலங்கு ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து விலங்குகள் ஆர்வலர் கூறுகையில், இது "காட்டுமிராண்டித்தனமான செயல் கத்தார் சமூகத்திற்கு அச்சுறுத்தல் தரக்கூடியதாக உள்ளது.

நாய்களைக் கொன்ற குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும், பொதுமக்களுக்கு எளிதில் துப்பாக்கி கிடைப்பதை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: 50 வயது நபரின் ஆசன வாய் பகுதியில் சிக்கிய வாட்டர் பாட்டில்.. நடந்தவற்றை கேட்டு மருத்துவர்கள் அதிர்ச்சி!