உலகம்

பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த டீ குடிப்பதை குறையுங்கள்.! - பொது மக்களுக்கு அறிவுறுத்திய அமைச்சர்..

பாகிஸ்தான் தற்போது பொருளாதார நெருக்கடியில் உள்ளதால், அதனை சீர்படுத்த அந்நாட்டு மக்கள் டீ குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தானின் ஒன்றிய திட்டமிடுதல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அஹ்சான் இக்பால் நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செய்தியாளரை சந்தித்த அமைச்சர் கூறுகையில், "கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் சுமார் 13 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் மதிப்பிலான டீத்தூளை இறக்குமதி செய்துள்ளோம். மேலும், கடந்த 2020-21ஆம் நிதியாண்டில், சுமார் 70.82 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் பணம் டீ இறக்குமதிக்காக செலவு செய்யப்பட்டுள்ளது. நாடு தற்போது தீவிரமான பொருளாதார சிக்கலில் இருக்கும் நிலையில், நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பு தற்போது 10 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக மாறியிருக்கிறது. பாகிஸ்தான் தற்போது பொருளாதார நெருக்கடியில் உள்ளதால், மக்களும் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். எனவே மக்கள் டீ குடிப்பதை குறைத்து கொள்ள வேண்டும். இதனால் அரசுக்கு உண்டாகும் இறக்குமதிச் செலவு குறையும்" என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "வியாபாரம் செய்பவர்கள் தங்கள் கடைகளை இரவு 8.30 மணிக்கு மூடுவதன் மூலமாக மின்சாரத்தையும் சேமிக்க முடியும்" என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

Pakistan Prime Minister : Shehbaz Sharif

பாகிஸ்தான் நாட்டில் அந்நியச் செலாவணிக்கான சேமிப்புகள் படிப்படியாக குறைந்து வரும், இந்த சூழலில், வெறும் 2 மாதங்களுக்கான இறக்குமதி பொருள்களை மட்டுமே வாங்க முடியும் என்ற நிலையில் தள்ளப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் இம்ரான் கான் பதவி விலகியவுடன், புதிதாக பதவியேற்ற ஷேபாஸ் ஷெரிப், இம்ரான் கானின் அரசு நாட்டின் பொருளாதாரத்தைச் சரியாக மேலாண்மை மேற்கொள்ளவில்லை எனவும், மீண்டும் பாகிஸ்தானை சரிசெய்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.