உலகம்

பாகிஸ்தானின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி மாயம்.. உளவு அமைப்பு கடத்தியதா? #WorldUpdates

பாகிஸ்தானின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி மாயம்

பாகிஸ்தானின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி குலாப் சிங் ஷாஹீன் மாயமானார். அவரை அந்நாட்டு உளவு அமைப்புகள் கடத்தியதாகவும் ரகசிய இடத்தில் வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இந்தியாவில் செயல்படும் சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி தலைவர் ஹர்ஜிந்தர் சிங் தாமி கூறும்போது, “பாகிஸ்தானில் பணிபுரிந்த குலாப் சிங் ஷாஹீன் கடத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அங்கு வசிக்கும் சீக்கியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, ஷாஹீன் எங்கு உள்ளார் என்பது குறித்து உடனடியாக பாகிஸ்தான் அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.

புதின், ஜெலன்ஸ்கியை நேரில் சந்திக்கிறார் ஐ.நா. பொதுச்செயலாளர்

உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருக்கு ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தனித்தனியாக கடிதம் எழுதி உள்ளார். அதில், இருவரையும் நேரில் சந்தித்து பேச உள்ளதாக கூறியுள்ளார். இந்த கடிதங்கள் ரஷ்யா மற்றும் உக்ரைனின் நிரந்தர தூதரகங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஐ.நா. பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் தெரிவித்தார்.

போலாந்து நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் விபத்து

போலாந்தில் ஜேஎஸ்டபுள்யு சுரங்க நிறுவனத்தால் பாவ்லோவைஸ் பகுதியில் நியோவெக் என்கிற நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இதன் மேற்பரப்பின் கீழ் சுமார் 3000 அடியில் திடீரென பயங்கர சத்தத்துடன் மீத்தேன் வெடித்தது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து 13 பிரிவு மீட்புப் படையினர் உடனடியாக விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மீட்பு பணியின்போது 7 பேருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக சுரங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 19 பேர் படுகாயமடைந்ததாகவும், 7 பேரை காணவில்லை என்றும் சுரங்க அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு போலாந்து பிரதமர் மேட்யூஸ் மொராவெக்கி இரங்கல் தெரிவித்தார்.

மரியுபோல் நகரை கைப்பற்றியது ரஷ்யா- ராணுவ வீரர்களுக்கு அதிபர் புதின் பாராட்டு

உக்ரைனின் மரியுபோல் நகரை முழு கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்ததாக ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது. ரஷ்யா கைப்பற்றியதன் மூலம் மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மரியுபோல் நகரை கைப்பற்றியதற்காக ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார். மரியுபோல் எஃகு ஆலையைத் தாக்கும் திட்டத்தை ரஷிய அதிபர் புதின் ரத்து செய்தார், அதற்குப் பதிலாக முற்றுகையிட உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் பறக்கவிட்ட சரித்திர சாதனையின் ஓராண்டு நிறைவு: நாசா அறிவிப்பு!

செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் பறக்கவிட்டு சரித்திர சாதனை படைக்கப்பட்ட நிகழ்வு ஓராண்டை கடந்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த 2020ஆம் ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியது. பெர்சவரன்ஸ் ரேவருடன் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் ஒன்றும் இணைத்து அனுப்பப்பட்டது.

இன்ஜெனியூனிட்டி எனப் பெயரிடப்பட்டுள்ள 1.8 கிலோ எடையுள்ள ஹெலிகாப்டர் கடந்த ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி செவ்வாயின் மேற்பரப்பில் இருந்து 10 அடி உயரம் வெற்றிகரமாகப் பறந்து சரித்திர சாதனையை படைத்தது. பூமியைத் தவிர மற்றொரு கிரகத்தில், முதன்முதலாக ஹெலிகாப்டரை இயக்கி நாசா வரலாற்று சாதனை படைத்தது. தற்போது இந்த சரித்திர சாதனை படைக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: அசாஞ்சேவை நாடு கடத்த உத்தரவு... முக்கிய முடிவை எடுக்கவுள்ள இந்திய வம்சாவளி உள்துறை அமைச்சர்! #5in1_World