உலகம்

ஸ்ரீதேவி உட்பட 5000 சடலங்கள் : அமீரகத்தில் இறந்தவர்களை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உதவும் நிஜ ஹீரோ அஷ்ரப்

கேரளாவின் கோழிக்கோட்டைப் பூர்வீகமாக கொண்டவர் அஷ்ரப். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமீரகத்தின் ஆஜ்மனில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மெக்கானிக் ஷாப் நடத்தி வரும் அஷ்ரப், அமீரகத்தில் இந்தியா உள்ளிட்ட வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் இறந்துவிட்டால், அவர்களின் உடல்களைச் சொந்த நாட்டுக்கு அனுப்பும் சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

இதுவரை துபாயிலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சடலங்களை இந்தியா உள்ளிட்ட 38 நாடுகளுக்கு அஷ்ரப் அனுப்பியுள்ளார். பாகிஸ்தானில் இருந்து உதவி கேட்பவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டியிருக்கிறார். மேலும், பணம் கொடுத்து உடல்களை தாய்நாட்டுக்கு எடுத்துச் செல்ல வசதி இல்லாதவர்களுக்கு, தன் சொந்த செலவில் சடலங்களை அனுப்பி வைக்கிறார் அஷ்ரப்.

அதுபோல, கடந்த 2018ம் ஆண்டு தமிழ் மற்றும் இந்தி திரையுலைச் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி, துபாய் நட்சத்திர விடுதியின் கழிவறையில் உயிரிழந்தார். அப்போது அவரின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டது. அந்த சிக்கலை தீர்த்து ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவிற்கு கொண்டுவர அஷ்ரப்தான் உதவினார்.

இந்நிலையில், சடலத்தைக் கொண்டு செல்லும் விஷயத்தில் ஏர் இந்தியா நிறுவனம் கடுமையாக நடந்து கொண்டது. சடலங்களை இந்தியா கொண்டு செல்ல கிலோவுக்கு 200 ரூபாய் கட்டணம் வசூலித்தது ஏர் இந்தியா.

இதனால், உடல் மற்றும் சவப்பெட்டியுடன் சேர்ந்து 200 கிலோ வந்துவிடுவதால் ஏழை மக்கள் எப்படி பெரும் தொகையைச் செலுத்த முடியாம் என கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் அஷ்ரப். இதனைத் தொடர்ந்து, சடலங்களைத் தாய்நாட்டிற்குக் கொண்டு செல்ல 30 ஆயிரம் ரூபாய் நிலையான விலையை உச்ச நீதிமன்றம் நிர்ணயம் செய்வதற்கு வழிவகுத்தவர் அஷ்ரப்.

இந்த சேவை குறித்து, அஷ்ரப் கூறுகையில், "அமீரகத்தில் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் இறந்துவிட்டால், அமீரக நாட்டின் குடியுரிமை பெற்றவரின் பெயரில் தான் உடல்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்ப முடியும். இதனால் நான் இந்த சேவையில் ஈடுபட்டு வருகிறேன்.

மேலும், அன்புக்குரியவர்கள் மறைந்துபோனால் நெருக்கமானவர்கள் எப்படி துடிப்பார்கள் என்று தெரியும். அமீரக நாட்டின் நடைமுறைகளை அறியாதவர்கள், எளிதில் பூர்த்தி செய்ய முடியாது. இங்கு கட்டிடத் தொழிலாளியும் ஒன்றுதான் கோடீஸ்வரனான ஸ்ரீதேவியும் ஒன்றுதான். யாராக இருந்தாலும் முறையான ஆவணங்கள் மட்டுமே இங்கு பேசும். இதனால் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன்" என தெரிவித்துள்ளார்.

Also Read: மோடி ஸ்டேடியம்.. அம்பானி, அதானி END.. அன்றே கணித்த ‘தமிழ்படம் சிவா’ - அடுத்து காவி பந்து தான?