உலகம்

மியான்மரில் இராணுவ ஆட்சி அமல் - ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது!

கடந்த 1962 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் இராணுவ ஆட்சி நடைபெற்றது. இதை எதிர்த்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி சுதந்திர போராட்டத்தை வழிநடத்தினார். சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

கடந்த 2015-ல் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆங் சான் சூகியின் கட்சி வெற்றி பெற்றது. அவரது மகன்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதால் அவரால் அதிபர் பதவியேற்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து சூகிக்கு நெருக்கமான டின் கியாவ் (71) அதிபர் பதவியேற்றார். நாட்டின் தலைமை ஆலோசகராக ஆங் சான் சூகி பொறுப்பேற்றார்.

ராக்கைன் மாநிலத்தில் இராணுவத் தளபதிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் 7.40 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். சூகிக்கு இருந்த ஜனநாயகப் பிம்பமானது இந்த நடவடிக்கைகளை அவர் வெளிப்படையாக ஆதரித்ததன் மூலம் சிதைந்துபோனது.

மியான்மரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது. இந்தநிலையில் ஆங் சான் சூகி, அந்நாட்டு இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குடிமை அரசுக்கும் இராணுவத்துக்கும் சில மாதங்களாகவே அங்கு பதற்றமான உறவு நிலை நீடித்திருந்தது. இந்நிலையில் தேர்தலை மோசடி என்று அந்நாட்டு அராணுவம் விமர்சித்தது. யாங்கூன் உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Also Read: “பட்ஜெட்டில் புதுச்சேரியை புறக்கணித்த பா.ஜ.க அரசு” - நாராயணசாமி குற்றச்சாட்டு!