உலகம்

ஜின்பிங்-மோடி சந்திப்பால் சாதித்தது என்ன? - சீன ஊடகங்களுக்கு பேட்டியளித்த துணை வெளியுறவு அமைச்சர்!

இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை மாமல்லபுரத்தில் கடந்த அக்டோபர் 11 மற்றும் 12ம் தேதிகளில் முறைசாரா உச்சி மாநாட்டில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் முதல் நாளில், மோடியும் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் நினைவுச் சின்னங்களைப் பார்வையிட்டனர். பின்னர், கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இதையடுத்து, அவர்கள் வர்த்தகம் மற்றும் இருநாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடினர்.

இந்நிலையில், மோடி - ஜின்பிங் சந்திப்பு குறித்து சீனாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் லுயோ ஜாவோஹுய் (Luo Zhaohui) அந்நாட்டு ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது :

“கடந்த ஆண்டு சீனாவின் வுஹானில் நடைபெற்ற முதல் முறைசாரா சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் தற்போதைய மாமல்லபுரம் சந்திப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

இருநாட்டு உறவுகளை மேம்படுத்தவும், அரசு நிர்வாகத்தின் தொடர்புகளை மேம்படுத்தவும், வளர்ச்சி உத்திகளை வலுப்படுத்தவும் இந்த உச்சிமாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

அமைதியான, பாதுகாப்பான உலகத்தைக் கட்டியெழுப்ப இருநாடுகளும் உறுதிபூண்டுள்ளன. பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்த சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் அனைத்து நாடுகளுக்கும் நன்மைகளைத் தரும் வகையிலான திறந்த மற்றும் உள்ளடக்கிய வர்த்தக ஒப்பந்தங்களை தொடர்ந்து செயல்படுத்தும் என உறுதிசெய்யப்பட்டது.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒரு உயர்மட்ட பொருளாதார மற்றும் வர்த்தக உரையாடல் முறைமையை நிறுவ ஒப்புக்கொள்ளப்பட்டது.

2020ம் ஆண்டை இந்திய-சீன கலாச்சார மற்றும் மக்கள் பரிமாற்றங்களின் ஆண்டாக அறிவிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. மேலும், இந்திய - சீன ராஜதந்திர உறவுகளின் 70ம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அடுத்தாண்டு 70 நிகழ்வுகளை நடத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.