உலகம்

மரண தண்டனையா? விடுவிப்பா? : குல்பூஷன் ஜாதவ் வழக்கில் இன்று தீர்ப்பு!

பாகிஸ்தான் நாட்டில் உளவு பார்த்ததாகக் கூறி கடந்த 2016-ம் ஆண்டு இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் கைது செய்யப்பட்டார். உளவு பார்த்தல் மற்றும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாகக் கூறி பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

குல்பூஷன் மீதான விசாரணையில் வியன்னா ஒப்பந்த நெறிமுறைகளை பாகிஸ்தான் பின்பற்றவில்லை எனக் குற்றம் சாட்டிய இந்திய அரசு, சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் குல்பூஷன் மீதான மரண தண்டனைக்கு தற்காலிக தடை விதித்திருந்தது.

இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்த சர்வதேச நீதிமன்றம் இன்று (ஜூலை 17) தீர்ப்பு வழங்குகிறது. தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றம் (ஐசிஜே) இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது.

இதுதொடர்பாக சர்வதேச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "ஐ.நா.வின் சட்ட அங்கமான சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் அப்துல்காவி அகமது யூசுப் தீர்ப்பை வாசிப்பார். நீதிபதிகள் குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற 15 நீதிபதிகளும் தலைமை நீதிபதியின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவோ, எதிர்ப்பு கருத்துகளை வெளியிடவோ செய்வார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 2017-ல், பாகிஸ்தான் நீதிமன்றம் குல்பூஷண் ஜாதவுக்கு வழங்கிய மரண தண்டனையை தற்காலிகமாக ரத்து செய்த சர்வதேச நீதிமன்றம், இன்று அந்தத் தீர்ப்பை உறுதி செய்து ஜாதவை விடுவிக்க பாகிஸ்தானுக்கு உத்தரவிடும் என இந்திய அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.