உலகம்

குல்பூஷணுக்கு வழங்கிய மரண தண்டனையை மறுஆய்வு செய்யவேண்டும் : சர்வதேச நீதிமன்றம் உத்தரவு!

‘ரா’ உளவு அமைப்புக்காக பாகிஸ்தான் நாட்டில் உளவு பார்த்ததாகக் கூறி கடந்த 2016-ம் ஆண்டு இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் கைது செய்யப்பட்டார். உளவு பார்த்தல் மற்றும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாகக் கூறி பாகிஸ்தான் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

குல்பூஷண் மீதான விசாரணையில் வியன்னா பிரகடன நெறிமுறைகளை பாகிஸ்தான் பின்பற்றவில்லை எனக் குற்றம்சாட்டிய இந்திய அரசு, சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் குல்பூஷன் மீதான மரண தண்டனைக்கு தற்காலிக தடை விதித்திருந்தது.

இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்த நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றம் (ஐசிஜே) இன்று தீர்ப்பு வழங்குவதாகத் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சற்றுமுன்பு, குல்பூஷண் ஜாதவை தூக்கிலிட தடை விதித்துள்ளது சர்வதேச நீதிமன்றம்.

இந்திய தூதரகத்தின் உதவியை நாட குல்பூஷண் ஜாதவுக்கு உரிமை உண்டு. வியன்னா பிரகடனத்துக்கு எதிரான வகையில் பாகிஸ்தானில் குல்பூஷண் வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. குல்பூஷணுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் மறுஆய்வு செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளது சர்வதேச நீதிமன்றம்.