Viral

திசைமாறிய சோகம்.. 5 வருடத்திற்கு பிறகு தாய் வீடு திரும்பும் ‘சினேரியஸ் கழுகு’ : தமிழக வனத்துறை அசத்தல்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நகரத்தில் உள்ள ஆசாரிப்பள்ளம் என்ற இடத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட சினேரியஸ் கழுகு, கன்னியாகுமரி வனத்துறையினரால் மீட்கப்பட்டு, உரிய சிகிச்சை வழங்கப்பட்டது.

அன்று முதல் இப்பறவை உதயகிரி உயிரியல் பூங்காவில் வைத்துவனத்துறை அலுவலர்களால் சீரான, சரியான, தொடர்ந்து கவனம் செலுத்தி பராமரிக்கப்பட்டு, நல்ல நிலையில் வளர்ந்து வருகிறது. இப்போது, இந்த சினேரியஸ் கழுகு காட்டில் வாழ்வதற்கான தகுந்த உடல்நிலையோடு இருக்கிறது. ஒக்கி புயலின் நினைவாக இந்த சினேரியஸ் கழுகிற்கு, “ஒக்கி” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சினேரியஸ் வகை கழுகானது, அதிக தொலைவு இடம் பெயர்ந்தும், கூட்டமாக வாழும் ஒரு சமூக பறவை. அதன் அடிப்படையில், தமிழ்நாடு வனத்துறையானது சிறப்பு முயற்சிகள் எடுத்து, இப்பறவையை இயற்கை சூழலில் மீள அனுப்ப ஆணையிட்டுள்ளது.

தனியாக மீட்கப்பட்ட இளம் சினேரியஸ் கழுகு இனமானது அலைந்து திரியும் இயல்புடையது. காற்றோட்ட திசையின் மாறுபாடு காரணமாக இக்கழுகு கன்னியாகுமரியை வந்தடைந்திருக்கலாம். பெரிய கழுகு பெரும்பாலும் காற்றோட்ட திசை மற்றும் பருவநிலை சார்ந்த வெப்பத்தின் அடிப்படையில் உயர பறக்கும் தன்மையுடையது. பருவநிலை மாறுபாட்டால், இந்த இளம் கழுகு பாதிக்கப்பட்டிருக்கலாம்.

இந்தியாவில்,சினேரியஸ் வகை கழுகு வாழ்வதற்கு ஏற்ற பருவநிலையை கருத்திற்கொண்டு, வடஇந்தியாவில் உள்ள இராஜஸ்தான் மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விடுவிக்கலாம் என்று பரிந்துரை பெறப்பட்டது. இதற்காக இராஜஸ்தான் மாநில வனஉயிரின பாதுகாவலரிடமிருந்து தேவையான அனுமதி பெறப்பட்டது.

இராஜஸ்தான் மாநிலத்தில் கால்நடை சடலங்களை சேகரித்து கழுகினங்களுக்கு உணவளிக்கும் பல இடங்கள் உள்ளன. அதில் ஜோத்தாபூர் நகரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள “கெரு” என்ற இடத்தில் இருக்கும் கால்நடை சடலங்களை சேகரித்து வைக்கும் இடத்தில், அதே வகை கழுகினங்கள் மீட்கப்பட்ட சினேரியஸ் கழுகினை விடுவிக்கக் கூடிய சரியான இடமாக பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும் இந்த இடத்திற்கு அருகில் ஜோத்பூர் உயிரியல் பூங்கா அதாவது மாச்சியா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த உயிரியல் பூங்காவில் வளர்ப்பு கழுகுகளை பராமரிக்க தேவையான வசதிகள் உள்ளன. இந்த இடத்தை கழுகின் உடலில் உரிய டிரான்ஸ்மீட்டர் பொருத்தப்பட்டு இயற்கை சூழலில் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டது.

இந்த உயிரியல் பூங்கா கன்னியாகுமரியிலிருந்து சுமார் 2600 கி.மீ. தொலைவில் உள்ளது. சாலை அல்லது இரயில் மார்க்கமாக கழுகினை கொண்டு செல்வதற்கு 4 முதல் 5 நாட்கள் ஆகும். மேலும் நெடுந்தூர சாலை/ இரயில் பயணம் இப்பறவைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும். எனவே இந்த கழுகினை வான் வழியாக ஜோத்பூர் கொண்டு செல்ல மத்திய விமான அமைச்சகத்தின் சிறப்பு அனுமதி பெறப்பட்டது.

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் தேவையான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து இதற்கென்று வனத்துறைக்கு உதவியது. அதன் அடிப்படையில் இந்த கழுகு கீழ்க்கண்டவாறு ஜோத்பூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன்படி கடந்த 30ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து சாலைமார்க்கமாக வண்டலூர் அறிஞர் அண்ணா வனஉயிரியல் பூங்காவிற்குக் கொண்டுவரப்பட்டது. இரண்டு நாள்கள் வண்டலூர் அறிஞர் அண்ணா வனஉயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட நிலையில், இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் ஜோத்பூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கூண்டில்போதிய காற்றோட்ட வசதியுடன், உயிருள்ள விலங்குகளை கொண்டு செல்வதற்கென்று உள்ள சர்வதேச விமான பயண நெறிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கழுகு கொண்டு செல்லப்பட்டது.

விமான பயணத்தின்போது இக்கழுகுக்கு தேவையான காற்றோட்ட வசதி மற்றும் போதிய இடவசதியுடன் கொண்டு செல்வதற்கு ஏர் இந்தியா விமான பைலட்டுகள் பெறும் உதவி புரிந்தனர். டெல்லி விமான நிலையத்தில் பயண இடை நிறுத்தத்தின்போது தேவையான பராமரிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

விமான பைலட்டுகள் மற்றும் பணியாளர்களின் சிறந்த உதவியுடன் இந்த கழுகு ஜோத்பூர் உயிரின பூங்காவை இன்று பிற்பகல் அடைந்தது. இந்திய வன உயிரின நிறுவனத்தின் மூலம் இப்பறவைக்கு டிரான்மீட்டர் பொருத்தப்பட்டு தற்போது இயற்கை சூழலில் விடுவிப்பதற்காக உள்ளது. தமிழ்நாடு வனத்துறையின் இத்தகைய முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டைத் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: “காடுகளின் தூய்மை காவலனாக திகழும் பிணந்தின்னி ‘பாறு கழுகுகள்’ - என்ன காரணம்?” : சிறப்பு செய்தி தொகுப்பு!