Viral

ஆற்றில் விழுந்து 10 மாதங்களுக்கு பின் கிடைத்த ஐபோன்.. நல்ல நிலையில் இருந்ததால் ஆச்சரியத்தில் உரிமையாளர்!

இங்கிலாந்தை சேர்ந்த ஓவைன் டேவிஸ் என்பவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் சின்டர்ஃபோர்ட் என்ற இடத்தின் அருகே உள்ள வை நதியில் தனது ஐபோனை தவறவிட்டார்.

உடனடியாக இதை அவர் தேடிய நிலையிலும் அதை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளது. இதன் காரணமாக சோகத்துடன் தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் நடந்து சுமார் 10 மாதங்களுக்கு பிறகு, ஓவைன் டேவிஸ் ஐபோனை தொலைத்த இடத்தில் மிகுவல் பச்சேகோ என்பவர் தனது குடும்பத்துடன் படகில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் கண்ணில் ஐபோன் சிக்கிய நிலையில் அதை கண்டெடுத்துள்ளார்.

எப்படியும் அது வேலை செய்யாது என நினைத்த அவர் எதற்கும் இருக்கட்டும் என கருதி அதை சார்ஜ் செய்துள்ளார். ஆனால், அவரே ஆச்சரியப்படும் அளவில் அது சார்ஜ் ஆகியுள்ளது. அதன் முகப்பில் ஆகஸ்ட் 2021 என்று காட்டியதோடு ஒரு பெண் மற்றும் ஆணின் புகைப்படமும் இருந்துள்ளது.

பின்னர் இது தொடர்பான தனது சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பலர் பகிர்ந்திருந்த நிலையில், இதை பார்த்த ஓவைன் டேவிஸின் நண்பர்கள் இதை ஓவைனிடம் கூறியுள்ளனர்.

இதன் பின்னர் ஐபோனை கண்டுபிடித்தவரை தொடர்பு கொண்ட ஓவைன் தனது ஐபோனை திரும்பப்பெற்றுள்ளார். இந்த ஐபோன் 1.5 மீட்டர் ஆழத்தில் சுத்தமான தண்ணீரில் 30 நிமிடங்கள் தாக்குப்பிடிக்கும் என கூறப்பட்ட நிலையில் 10 மாதங்கள் தாக்குபிடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .

Also Read: தமிழக ரயில்வே பணியில் வட மாநிலத்தவரை சேர்க்க முயற்சி! சதியை முறியடித்த திமுக கூட்டணி கட்சி எம்.பி!