Viral

50 கிராம் பொங்கல் ரூ.80.. அதுவும் 8 மாதம் காலாவதி கெடு.. இது என்ன அநியாயம்? - IRCTC-ஐ விளாசிய முதியவர்!

ரயிலில் பயணிகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளின் தரம் குறித்து முதியவர் ஒருவர் பேசியிருப்பது நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் போன்ற தனியார் வசம் ஒப்படைத்தால் இந்த நிலைதான் ஏற்படும் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.

இது தொடர்பான காணொலியை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ரயிலில் பயணிக்கும் முதியவர் ஒருவர் வாங்கிய 50 கிராம் பொங்கலின் விலை 80 ரூபாய் என்றும் அதற்கான காலாவதியாகும் காலம் 8 மாதம் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இது போன்ற எடையுள்ள பொங்கல் வெறும் 5 ரூபாய்க்கே கிடைக்கிறது. இந்த பொங்கல் எப்போது தயாரித்தது என்றே தெரியாமல் அதற்கு காலாவதி தேதிக் குறிப்பிட்டு விற்பனை செய்து வருகிறார்கள். இப்படியான தரமற்ற உணவுகளை தயாரித்துவிட்டு அதனை விநியோகிக்கும் டெலிவரி ஆட்களை எதிரிகளாக சித்தரித்து விடாதீர்கள் என ஐ.ஆர்.சி.டி.சியைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுவரை சுரண்டியது எல்லாம் போதும், இதே உணவு பார்சல்களை மீண்டும் விற்பனை செய்தனை அதனை வாங்கி வெளியே வீசிவிடுவேன் என ஆதங்கத்தோடும், ஆவேசத்தோடும் அந்த முதியவர் பேசியுள்ளார். இந்த வீடியோவை பார்த்தவர்கள் பலர் கேள்வி கேட்காமல் கொடுப்பதை வாங்கினால் இப்படிதான் செய்வார்கள். ஆகவே ஒவ்வொரு குடிமகனும் தவறு நடக்கும் இடங்களில் கேள்வி எழுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Also Read: “இனி நாட்டில் விற்பதற்கு எதுவும் மிச்சமில்லை” - மோடி அரசை பகிரங்கமாக சாடிய திருச்சி சிவா !