Viral

18 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன் : Face App தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கண்டுபிடித்த பெற்றோர் !

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களை ஆதிக்கம் செய்து வருகின்றன Face App மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். அந்த செயலி மூலம் வயதானால் எப்படி இருப்பீர்கள்? சிறுவயதில் எப்படி இருந்தீர்கள்? பெண்ணாக இருந்தால் எப்படி இருப்பீர்கள்? என்பதை இதில் உள்ள ஃபில்டர் மூலம் உருவாக்க முடியும். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், Face App தொழில்நுட்பத்தின் உதவியால் 18 ஆண்டுகளுக்கு முன் தொலைந்த மகனை, பெற்றோர் கண்டுபிடித்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் குவான்டாங் மாகாணத்தின் ஷென்லேன் நகரை சேர்ந்த லீ என்பவரின் மகன் யு வீபெங். இவர் கடந்த 2001ம் ஆண்டு காணாமல் போயுள்ளார். அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவன் கடத்தப்பட்டுள்ளது தெரிய வந்தது. இருப்பினும் அவர்களால் சிறுவனை கண்டுபிடிக்க இயலவில்லை.

18 ஆண்டுகளாக மகனை காணாமல் சோகத்தில் இருந்த பெற்றோர், Face App செயலியின் தொழில்நுட்ப உதவியை பயன்படுத்தி தங்கள் மகனை கண்டுபிடிக்க முடிவு செய்தனர். அதையடுத்து, காணாமல் போன தங்கள் மகனின் சிறுவயது புகைப்படத்தை, தொழிநுட்பத்தை பயன்படுத்தி தற்போதைய வயதுக்கு ஏற்றதுபோல மாற்றியுள்ளனர்.

இதையடுத்து அந்த புகைப்படங்களை போலீசாரிடம் கொடுத்து, போலீசார் உதவியுடன் மகனை தேடி வந்துள்ளனர். இந்நிலையில், சீனாவின் கவுங்சோ மாகாணத்தில் படித்து வரும் மாணவர் ஒருவரின் முகத்தோடு அந்த புகைப்படங்கள் ஒத்துப்போயுள்ளது.

இதையடுத்து அவரை போலீஸ் அணுகி, அவர் குறித்த விவரத்தை எடுத்து கூறியுள்ளனர். அனால் அதற்கு அந்த மாணவர் அதனை ஏற்க மறுத்துள்ளார். இதையடுத்து அவருக்கு டி.என்.ஏ சோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர் தான் காணாமல் போன சிறுவன் யு வீபெங் என்பது உறுதி செய்யப்பட்டது.அதனையடுத்து, 18 ஆண்டுகளுக்கு பிறகு அவர் தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.

கடத்தப்பட்ட சிறுவனை 18 ஆண்டுகளாக வளர்த்த வளர்ப்பு பெற்றோருக்கு நன்றி தெரிவிப்பதாக வீபெங்கின் தந்தை லீ கூறினார். “இனிமேல், அவருடைய வளர்ப்புத் தந்தை எனக்கு ஒரு சகோதரரைப் போல ஆகிவிடுவார்; என் மகனுக்கு இரண்டு அப்பாக்கள் இருப்பார்கள்” என்றும் அவர் கூறினார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.