Tamilnadu
"என் இனிய தமிழ் மக்களே..." காலமானார் இயக்குநர் இமயம் பாரதிராஜா : கண்ணீர் கடலில் தமிழ் சினிமா!
'இயக்குநர் இமயம்' என்று அன்போடு அழைக்கப்படும் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 84.
ஸ்டுடியோக்களுக்குள் முடங்கிக்கிடந்த தமிழ் சினிமாவை முதன்முதலாக கிராமத்து மண் வாசனை மாறாமல் வெளிப்புறங்களுக்கு கொண்டு சென்ற பெருமைக்குரியவர் இயக்குநர் பாரதிராஜா. கிராமத்தின் அழகை தனது ஒவ்வொரு காட்சியிலும் மக்களை ரசிக்கவைத்தார்.
தேனியில் பிறந்த பாரதிராஜா, இயக்குநர் கனவோடு வந்தவரை தமிழ் சினிமா உலகம் அன்போடு அனைத்துக் கொண்டது. தனது முதல் படத்திலேயே இரண்டு ஜாம்பவான் நடிகர்களை இயக்கி ஆச்சரியப்படுத்தினார். யார் இந்த இயக்குநர் என்று இருந்த பிரமிப்பு அவரது கடைசி படம் வரை இருந்தது.
தமிழ் திரையுலகில் அதுவரை இருந்த நாடகத்தனமான பாணியை மாற்றி, எளிய மனிதர்களின் வாழ்வியலையும் எதார்த்தத்தையும் பதிவு செய்தார். கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, மண்வாசனை, முதல் மரியாதை, கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா போன்ற பல காவிய படங்களை நமக்காக கொடுத்துள்ளார்.
ராதிகா, கார்த்திக், ராதா, நெப்போலியன், பிரியாமணி உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்களைத் திரையுலகிற்கு அறிமுகம் செய்தவர் இவரே ஆவார்.
அதேபோல் இயக்குநராக மட்டுமல்ல நடிகராகவும் தன்னை நிரூபித்து காட்டியுள்ளார். ஆயுத எழுத்து, குரங்கு பொம்மை, நம்ம வீட்டுப் பிள்ளை, திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்களில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
வயது மூப்பின் காரணமாக படங்களை இயக்குவதையும், நடிப்பதையும் தவிர்த்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இயக்குநர் பாரதிராஜாக காலமானார். அவரது மறைவுக்கு சினிமா உலகம் இரங்கல் தெரிவித்து வருகிறது.
Also Read
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!
-
“24 மணி நேரத்தில் 8 கொலைகள்.. தினமும் எகிறும் Crime Rate” : தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
எழுச்சியுடன் நடந்த திமுக முப்பெரும் விழா.. விருதுகளை வழங்கி சிறப்பித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
Dummy முதலமைச்சரின் ஆட்சியில் காற்றில் பறக்கும் சட்டம் - ஒழுங்கு : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சாடல்!