
சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று (செப்.19) திமுக முப்பெரும் விழா கழக்த்தின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில், கழகத் தொண்டர்களின் உற்சாகத்துடன் சிறப்புற நடைபெற்றது.
விழா நடைபெறும் கலைஞர் அரங்கத்திற்குள் வந்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், திராவிட இயக்கத் தலைவர்கள் பெரியார், பேரரிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளை சார்பில் கழகத்தின் மேற்கு, மத்திய, தெற்கு, வடக்கு மண்டலங்களைச் சேர்ந்த 17 சிறந்த கழக நிர்வாகிகளுக்கு விருது வழங்கி சிறப்பித்தார் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இதனைத் தொடர்ந்து, திமுக முப்பெரும் விழா விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
அதன்படி, முரசொலி அறக்கட்டளை சார்பில் ஊடகவியலாளரும், எழுத்தாளருமான ப.திருமாவேலன் அவர்களுக்கு “முரசொலி செல்வம் விருது” மற்றும் விருதுத் தொகையும் வழங்கப்பட்டது.

கழக விவசாய அணி துணைச் செயலாளர் கு.செல்லப்பாவுக்கு “பெரியார் விருது” , சேலம் மத்திய மாவட்ட அவைத் தலைவர் சேலம் ஜி.கே.சுபாஷ் அவர்களுக்கு ’அண்ணா விருது’ ஆகியவற்றுடன் ரூ.3 லட்சத்திற்கான விருதுத் தொகை வழங்கப்பட்டது.
கழக துணைப் பொதுச்செயலாளரும், தி.மு.க மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா அவர்களுக்கு ’கலைஞர் விருது’, ரூ.3 லட்சத்திற்கான விருதுத் தொகையும் வழங்கி சிறப்பித்தார் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

கழக மருத்துவர் அணித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி என்.வி.என்.சோமு அவர்களுக்கு ’பாவேந்தர் விருது’, கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் மிசா எஸ்.அகமது தம்பி அவர்களுக்கு ’பேராசிரியர் விருது’, கழக இளைஞர் அணி துணைச் செயலாளர் நா.இளையராஜா அவர்களுக்கு ’மு.க.ஸ்டாலின் விருது’-டன் ரூ.3 லட்சத்திற்கான விருதுத் தொகையும் வழங்கி கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பித்தார்கள்.






