Tamilnadu

வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!

சென்னை, கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த நூர் முகமது என்பவர், தனது வீட்டில் நகை காணாமல் போனது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், கொடுங்கையூர் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் (SI) தனசேகரன் விசாரணை மேற்கொண்டு வந்தார்.

இதன் தொடர்ச்சியாக, நேற்று நூர் முகமதுவின் வீட்டிற்கு உதவி ஆய்வாளர் தனசேகரன் சென்றுள்ளார்.அப்போது வீட்டில் இருந்த இளம் பெண்ணிடம் தனியாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி, அங்கிருந்த மற்ற அனைவரையும் அவர் வெளியே அனுப்பியுள்ளார்.

பின்னர் அந்தப் பெண்ணிடம், “நான் க்ரைம் எஸ்.ஐ., உண்மையைச் சொல்” எனக் கூறி அவரது கையைப் பிடித்துள்ளார். மேலும், “உன் கை வேர்க்கவில்லையே… நீ பயப்படவில்லையே… உன் உதடு உண்மையை பேசவில்லையே…” என்று கூறி, அப்பெண்ணின் உதட்டைத் தொட்டு அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.

அதுமட்டுமன்றி, அந்தப் பெண் அணிந்திருந்த புர்கா உடையுடன் புகைப்படம் எடுத்தவர், மீண்டும் புர்காவைக் கழற்றச் சொல்லி மற்றொரு புகைப்படமும் எடுத்துள்ளார். “இந்தப் புகைப்படம் என்னிடம் மட்டுமே இருக்கும்” எனக் கூறி, அப்பெண்ணிடம் கொச்சையாகப் பேசியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில், உயர் காவல் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!