Tamilnadu

இதுதான் மாற்றமா? : முதல்வர் பதவியேற்பு விழாவில் 3 ஆவதாக இசைக்கப்பட்ட ‘தமிழ்த்தாய்’ வாழ்த்து!

தமிழ்நாட்டில் பெருமைமிகு தாய்த் தமிழை சிறப்பிக்கும் வகையில், இதுவரை நடைபெற்று வந்த அனைத்து தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளும் ‘தமிழ்த்தாய்’ வாழ்த்துப் பாடலுடன் மட்டுமே தொடங்கும் வழக்கம் இருந்து வந்தது.

இதனை அழித்தொழிக்க தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு முயற்சிகள் எடுத்தும், அதனை அனுமதிக்காமல் தமிழின் பெருமையை பறைசாற்றும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்துடன் அரசு நிகழ்ச்சிகள் தொடங்குவதும், தேசிய கீதத்துடன் முடிவடைவதுமான நடைமுறை தி.மு.க ஆட்சியில் நீடித்து வந்தது.

ஆனால், அந்த நடைமுறை த.வெ.க தலைவர் விஜய், முதலமைச்சராக பதவியேற்ற விழாவிலேயே மாற்றப்பட்டது சர்ச்சையாகியுள்ளது.

தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு’ என பெயர் சூட்டி, அழைத்து வருவதே இங்கு பலருக்கு உறுத்தலாக இருந்து வருகிற நிலையில், அவர்களுக்கு நீண்டகாலமாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மீதும் ஒரு ‘உறுத்தல்’ இருந்துகொண்டே இருந்தது.

அந்த உறுத்தல், விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நிகழ்வில் நீங்கியுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்க வேண்டிய முதலமைச்சர் பதவியேற்பு விழா இந்து ராஷ்டிரத்திற்கு அடித்தளமாக அமைந்துள்ள ‘வந்தே மாதரம்’ பாடலுடன் தொடங்கியது மட்டுமல்லாமல்;

அரசு நிகழ்ச்சியின் இறுதியில் இசைக்கப்பட வேண்டிய ‘தேசிய கீதமும்’ தொடக்கத்திலேயே இசைக்கப்பட்டு, ‘தமிழ்த்தாய்’ வாழ்த்திற்கு மூன்றாவது இடமே தரப்பட்டது.

முதலில் ஒலிக்கப்பட்டிருக்க வேண்டிய தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம் தரப்பட்டதோடு நிற்காமல், ‘வந்தே மாதரம்’ மற்றும் ‘தேசிய கீதம்’ ஆகிய பாடல்கள் அரசு விழாவின் தொடக்கம் மற்றும் நிறைவு என இருமுறை இசைக்கப்பட்ட நிலையில், ‘தமிழ்த்தாய்’ வாழ்த்து ஒரு முறை மட்டுமே இசைக்கப்பட்டது.

இதனால், “‘மாற்றம் - மாற்றம்’ என பேசி ஆட்சியைப் பிடித்த த.வெ.க, தலைநிமிர்ந்து வீருநடையிட்டு வந்த தமிழ்நாட்டை மாற்றி தலைகுனிய வைத்துவிட்டதே!” என்ற கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

Also Read: ”புதிய அரசுக்கு வாழ்த்துகள்.. உடனிருந்த தோழமைக் கட்சிகளுக்கு நன்றிகள்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!