Tamilnadu
செய்தியாளர் மீது தாக்குதல் : ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளரின் செயலால் பரபரப்பு!
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டமன்றத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் பழனி, இன்று ஸ்ரீபெரும்புதூர் நகராட்சிக்குட்பட்ட கட்சிப்பட்டு பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் சிலர், "அ.தி.மு.க-விற்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம்; இந்தத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வி அடையும்" என்று வெளிப்படையாகக் கூறித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அதிமுகவினர், அங்கு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த தனியார் செய்தித் தொலைக்காட்சி செய்தியாளரை நோக்கித் தாக்க முற்பட்டனர்.
தொடர்ந்து, அங்கிருந்த அ.தி.மு.க வேட்பாளர் பழனி, கட்சியினரைத் தள்ளிவிட்டுத் தானே முன்வந்து செய்தியாளரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. செய்தியாளரின் கையைப் பிடித்து முறுக்கி, அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வாக்களிக்க மாட்டோம் என்று கூறிய மக்களின் கருத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் செய்தியாளர் மீது வேட்பாளரே தாக்குதல் நடத்திய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இச்சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்பாளரின் இந்த அராஜகச் செயலுக்குப் பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
Also Read
-
‘அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லை.. மரப் பலகையில் படுக்க வைத்து சிகிச்சையளித்த அவலம்!’
-
‘ஊழலை ஒழிக்க வந்த உத்தமன்.. தவெக-வின் Party Fun மிரட்டல்கள்.. வைரலான வீடியோ.. தீவிர நடவடிக்கை தேவை!’
-
“தெரிந்தும் தெரியாதது போல் நாடக ஆட்சி நடத்துகிறீர்களா CM Sir?” : முன்னாள் சபாநாயகர் அப்பாவு கண்டனம்!
-
“நீட் தேர்வு ரத்துதான் நிரந்தரத் தீர்வு; அதைத்தான் நாடு எதிர்பார்க்கிறது!” : முரசொலி தலையங்கம்!
-
இரண்டரை மாதத்தில் ரூ.20 ஆயிரம் கோடி கடன்.. - முதல்வர் விஜயை விளாசிய முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்!