Tamilnadu

“மக்களை கசக்கி பிழியும் ஒன்றிய பா.ஜ.க அரசு” : சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!

போர் காரணமாக இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சுங்கச்சாவடி கட்டணங்களை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் திடீரெனக் கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டிருப்பது மக்களை கசக்கி பிழிக்கும் பகற்கொள்ளையாகும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பொதுமக்கள் மீது கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் மோசமான நடவடிக்கையாகும். ஏற்கனவே எரிபொருள் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சுங்கக் கட்டண உயர்வு மேலும் அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்.

சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டதன் நோக்கம் சாலை வசதிகளை மேம்படுத்துவதாக இருந்தாலும், பல இடங்களில் சாலைகளின் தரம் மிகவும் மோசமாகவே உள்ளது. இதுபோன்ற சூழலில் கட்டணத்தை உயர்த்துவது முற்றிலும் நியாயமற்றது. பொதுமக்களுக்குத் தரமான சேவைகள் வழங்கப்படாமல் கட்டணத்தை அதிகரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

மேலும், அடிக்கடி சுங்கக் கட்டணங்களை உயர்த்துவது சிறு வணிகர்கள், விவசாயிகள் மற்றும் தினசரி பயணிகளின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது பொருளாதார வளர்ச்சிக்கும் தடையாக அமையும்.

எனவே, உடனடியாக இந்தச் சுங்கச்சாவடிக் கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஏற்கனவே வாகனம் வாங்கும் போது சாலை வரி வசூலித்து விட்டு தொடர்ச்சியாகச் சுங்கவரி வசூலிப்பதை ஏற்க இயலாது.

பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய நடவடிக்கைகளை உடனே ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்." என தெரிவித்துள்ளார்.

Also Read: 175 இல்லை - 176 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் களம் காணும் வேட்பாளர்கள்! : முழு விவரம் உள்ளே!