Tamilnadu

முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி, இந்திய அணி தொடர்ச்சியாக 2வது முறை சாம்பியன் பட்டம் வென்றது. கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், இன்று (மார்ச் 16) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில், வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இரு வீரர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, திருவள்ளுவர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். தொடர்ந்து, அவர்களுடன் உரையாடலிலும் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து, இந்திய அணியின் ஜெர்சி மற்றும் தொப்பியை நினைவுப் பரிசாக இரு வீரர்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கினர். அந்த ஜெர்சியில் “வாழ்த்துகள் மற்றும் நன்றி சார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த சந்திப்பு குறித்து முதலமைச்சர் தனது சமூக வலைதள பக்கத்தில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தியுடன் நடந்த சந்திப்பு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

விடாமுயற்சி, ஒழுக்கம் மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றால் உருவான அவர்களின் பயணம் குறித்து பயனுள்ள உரையாடல் நடைபெற்றது. எதிர்காலப் போட்டிகளில் மேலும் வெற்றி பெற்று பெருமை சேர்க்க வாழ்த்துகள்,” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!