Tamilnadu

“தமிழ்நாட்டு இளைஞர்களை அரசியல்படுத்தவே அறிவுத்திருவிழா!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைவுரை!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 75– ஆண்டு நிறைவை முன்னிட்டு, கழக இளைஞர் அணி ‘தி.மு.க 75 அறிவுத்திருவிழா’ என்னும் மாபெரும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தி.மு.க இளைஞர் அணி முன்னெடுத்த ‘தி.மு.க 75 – அறிவுத்திருவிழா’ என்னும் மகத்தான நிகழ்ச்சியை நவ.08 அன்று கழகத்தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வின் தொடக்க நாளில் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூல் வெளியிடப்பட்டு, ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ தலைப்பிலான கருத்தரங்கங்கள் நடைபெற்றன.

மேலும் ஒருவார காலம் நடைபெற்ற ‘முற்போக்கு புத்தகக்காட்சி’யையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவ.08 அன்று தொடங்கி வைத்த நிலையில், இன்றுடன் (நவ.16) புத்தகக் காட்சி நிறைவடைந்தது.

நிறைவு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பின்வருமாறு,

“நம்முடைய இளைஞரணி நடத்திய முற்போக்குப் புத்தகக் காட்சியில் முழுக்க முழுக்க அரசியல் புத்தகங்களை மக்கள் பார்வையிட்டு வாங்கியிருக்கிறார்கள்.

கடந்த 9 நாட்களில் சுமார் 20,000க்கும் மேற்பட்டவர்கள் புத்தகக் காட்சிக்கு வருகை தந்து, ரூ.35 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை வாங்கி சென்றுள்ளனர். குறிப்பாக, காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்ற புத்தகம் 1,500 படிகள் விற்பனையாகியுள்ளன. முன்பதிவு திட்டத்தில் 7,000 படிகள் விற்றுள்ளன.

பொதுவாக, வள்ளுவர் கோட்டம் என்றால் ராசி இல்லாத இடம் என்பார்கள். அறிவுத்திருவிழா நடத்த நான் இந்த இடத்தை தேர்வு செய்ததற்கு, அதுவும் ஒரு முக்கிய காரணம். அறிவுத்திருவிழாவிற்கும் ராசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நினைப்பவன் நான்.

தமிழ்நாட்டில் 1989ஆம் ஆண்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு, கலைஞர் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள தேர்வு செய்த இடம் வள்ளுவர் கோட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதைபோல், ஆண்டுதோறும் வெவ்வேறு மாவட்டங்களில் அறிவுத்திருவிழா மேற்கொள்ள கழக இளைஞரணி சார்பில் ஈடுபடுவோம் என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

பலர் ஏன் அறிவுத்திருவிழா என கேள்வி எழுப்பினார்கள், தமிழ்நாட்டு இளைஞர்களை அரசியல்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நடத்தப்பட்டதுதான் தி.மு.க அறிவுத்திருவிழா. கழக இளைஞரணியினர் நிறைய படிக்க வேண்டும். அனைவரின் கருத்துகளையும் தெரிந்து கொண்டு, அதற்கு பதிலடி தரும் வகையில் நம் அறிவை வளர்க்கவும், ஆற்றலை பெருக்கவும் வேண்டும்.

நாட்டில் சில தலைவர்கள், தங்களது தொண்டர்கள் அறிவாளிகளாக இருக்க வேண்டும் என்று விரும்புவதில்லை. தொண்டர்கள் அரசியல் தெளிவு பெற்றால் அரசியல் செய்ய முடியாது என நினைக்கிறார்கள். உதாரணத்திற்கு, அ.தி.மு.க தொண்டர்களுக்கு கொள்கைகள் எதுவுமே தெரியாது. தி.மு.க.வை எதிர்ப்பதுதான் அ.தி.மு.க.வின் ஒற்றை நோக்கமாக இருக்கிறது.

அப்படியான கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொள்கையை மட்டும் மறக்கவில்லை. தனது தலைவரையும் மறந்துவிட்டார். சமீபத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலையிட்டுவிட்டு, அண்ணாவிற்கு மரியாதை செலுத்தியிருக்கிறேன் என பேட்டியளிக்கிறார் பழனிசாமி. இதுதான் அ.தி.மு.க.வின் நிலைமை.

இது ஒருபுறம் இருக்க, நாட்டில் எதிர்க்கட்சிகளை முடக்க இன்றைக்கு தேர்தல் ஆணையமே S.I.R வேலையில் ஈடுபட்டிருக்கிறது. தேர்தலையே திருட்டுத்தனமாக நடத்துவதற்கு முனைந்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. இதனை நாம் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.”

Also Read: “கோட்டத்தையே கொண்டாட்டமாக மாற்றிய அறிவுத்திருவிழா!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!