Tamilnadu

நலம் காக்கும் ஸ்டாலின்: மருத்துவ முகாமில் தொடர்ந்து பயனுரும் வெளி மாநிலத்தவர்கள்- அமைச்சர் மா.சு பதிலடி!

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (08.11.2025) பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், அசோக்நகர் டாக்டர் கலைஞர் கருணாநிதி நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாமினை பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பிறகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

=> “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் ஆய்வு :

“நலம் காக்கும் ஸ்டாலின் எனும் மகத்தான திட்டம் 02.08.2025 அன்று சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை அன்று தமிழ்நாட்டில் உள்ள 38 வருவாய் மாவட்டங்களிலும் இந்த முகாம் நடைபெறுகிறது. மேலும் இந்த முகாம் கடந்த வாரம் வரை 13 முகாம் என்கின்ற வகையில் இதுவரை 484 முகாம் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 7,57,168 பேர் பயனடைந்திருக்கிறார்கள். இந்த திட்டத்தை பொறுத்தவரை தமிழ்நாடு முழுவதும் 1256 முகாம்கள் நடத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும், சென்னைக்கு அடுத்து 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 5 மாநகராட்சிகளில் தலா 4 வீதம் 20 முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது. 10 இலட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 19 மாநகராட்சிகளில் தலா 3 வீதம் 57 முகாம்கள் என்கின்ற அளவிலும், தமிழ்நாட்டில் உள்ள 388 வட்டாரங்களில் தலா 3 என்கின்ற வகையிலும் ஆக ஒட்டு மொத்தம் 1,256 முகாம்கள் நடத்தப்படும் என்று முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு இதுவரை 484 முகாம்கள் நடத்தப்பட்டிருக்கிறது. இத்திட்டம் மக்களை பெரிய அளவில் கவர்ந்திருக்கின்றது. இன்று இந்த முகாம் 14வது வாரமாக தமிழ்நாடு முழுவதும் 39 இடங்களில் நடைபெற்று ஆக மொத்தம் 523 முகாம்களாக நடைபெற்று வருகிறது. 

மேலும் இம்முகாமில் பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், மகப்பேறியியல் மற்றும் மகளிர் நல மருத்துவம், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், இயன்முறை மருத்துவம், பல் மருத்துவம், மனநல மருத்துவம், நுரையீரல் மருத்துவம், நீரிழிவு மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, சித்தா மற்றும் இந்திய முறை மருத்துவம் போன்ற 17 வகையான மருத்துவ முறைகள் இந்த முகாம்களில் நடத்தப்படவிருக்கிறது. மேலும் தனியார் மருத்துவமனைகளில் முழு உடற்பரிசோதனைகளுக்கு ரூ.20,000/- வரை செலவாகும். அரசு மருத்துவமனைகளில் கூட ரூ.4,000/- வரை செலவாகும். ஆனால் கட்டணமின்றி இந்த முகாமில் முழு உடற்பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இன்னொன்று மிக முக்கியமான சேவையாக அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் ஒவ்வொரு முகாமிற்கும் அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு முழு உடற்பரிசோதனை செய்யப்படுகிறது. அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு மிகப் பெரிய சேவை செய்யப்படுவது என்பது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதல்முறை.

மேலும் இந்த முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் தரப்பட்டு வருகிறது. இந்த சான்றிதழ் பெறுவதற்கு மருத்துவர்களின் ஆலோசனை, மருத்துவர்களிடத்தில் அவர்களுக்கு எத்தனை சதவிகிதம் அளவிற்கு பாதிப்பு இருக்கின்றது என்று அறிந்து சான்றிதழ் வழங்குதல், தொடர்ந்து வருவாய் அளவில் சான்றிதழ் பிறகுதான் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற முடியும் என்கின்ற நிலை இருந்தது. எனவே மாற்றுத்திறனாளிகள் பல்வேறு அலுவலகங்களுக்கு சென்றுதான் இச்சான்றிதழ் பெறும் நிலை இருந்தது. அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அந்தந்த பகுதிகளிலேயே நடைபெறுகின்ற முகாம்களில் மாற்றுத்திறனாளிகள் நேரிடையாக வருகை புரிந்து அவர்களுடைய மாற்றுத்திறன் அளவினை மருத்துவர்களிடம் காண்பித்து அன்றைய நாளிலேயே சான்றிதழ்கள் பெறும் நிலையினை தந்திருக்கிறார்கள். இதுவரை நடைபெற்றுள்ள 484 முகாம்கள் மூலம் 31,618 மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் 1.47 கோடி குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றனர். இருந்தாலும் புதியதாக குடும்பங்கள் இத்திட்டத்தில் பதிவு செய்தவுடன் அவர்களுக்கும் காப்பீடு அட்டைகள் உடனடியாக வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இதுவரை நடைபெற்றுள்ள 484 முகாம்களில் 24,468 குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை 15 முகாம்கள் என்று அறிவிக்கப்பட்டு, கடந்த வாரம் வரை 7 முகாம்கள் நடைபெற்றுள்ளது.

இதுவரை 15,837 பேர் பயன்பெற்றிருக்கிறார்கள். மேலும் இந்த முகாமில் அமைப்புச்சார தொழிலாளர்களுக்கு முழு உடற்பரிசோதனை என்கின்ற வகையில் அவர்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் முழு உடற்பரிசோதனை செய்யப்படுகிறது. இது உலகளவில் எந்த நாட்டிலும், இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் இல்லாத ஒன்று.

அதாவது வெளிமாநில தொழிலாளர்களுக்கு மொழி பாகுபாடு, இன பாகுபாடு, எல்லை பாகுபாடு எதையும் பாராமல் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முழு உடற்பரிசோதனை செய்ய அறிவுறுத்தியிருக்கிறார்கள். வெளிமாநிலத்தவர்கள் இம்முகாமில் இதுவரை 250 பேர் பயன்பெற்று இருக்கிறார்கள். ஆக இன்று 8வது முகாமினை கோடம்பாக்கம் மண்டலம், அசோக்நகர் டாக்டர் கலைஞர் கருணாநிதி நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் முகாமில் ஆய்வு செய்யப்பட்டது”

- என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

Also Read: நவம்பர் மாதம் முதல்... 4 மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல்.. அமைச்சர் சக்கரபாணி கூறுவது என்ன?