Tamilnadu

B.Ed மாணாக்கர் சேர்க்கை ஆணை... எப்போது பதிவிறக்கம் செய்யலாம்? - அமைச்சர் கோவி.செழியன் கூறியது என்ன?

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில்
2025–26ஆம் கல்வியாண்டிற்கான பி.எட். மாணாக்கர் சேர்க்கை ஆணையை இணைய வழியில் 13.08.2025 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

"கடந்த ஆண்டுகளில் பி.எட். (B.Ed.)  மாணாக்கர் சேர்க்கை நேரடி கலந்தாய்வின் மூலம் நடைபெற்று வந்தது. இதனால் வெளியூர்களிலிருந்து மாணாக்கர் தங்களுடைய பெற்றோர்களுடன் சென்னைக்கு வந்து கலந்தாய்வில் கலந்து கொள்ளும் நிலை நேரிட்டது. இந்த சிரமங்களைப் போக்க முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான பி.எட். மாணாக்கர் சேர்க்கை இணைய வழியில் நடத்திட முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, விண்ணப்பங்கள் 20.06.2025 முதல் 21.07.2025 வரை இணைய வழியில் பெறப்பட்டன. 559 மாணவர் 2,986 மாணவியர் என மொத்தம் 3,545 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பின்னர், 31.07.2025 அன்று தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 900 இடங்களும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 1,140 இடங்கள் என 21 கல்வியியல் கல்லூரிகளில்  2,040 இடங்களும் உள்ளன. 

இவ்விடங்களுக்கு மாணாக்கர் தாங்கள் விரும்பும் கல்லூரிகளைத் தேர்வு செய்ய இணைய வழியில் 04.08.2025 முதல் 09.08.2025 வரை வழிவகை செய்யப்பட்டது. நாளை (13.08.2025) காலை 10.00 மணியில் இருந்து மாணாக்கர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை தங்கள் உள்நுழைவு (ID) மூலம் www.lwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பின்னர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் 14.08.2025 முதல் 19.08.2025 வரை சேர்ந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், மாணாக்கர் சேர்க்கைக்கு தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் உடன் எடுத்துச்செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.  20.08.2025 முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும்."

Also Read: தாயுமானவர் திட்டம் : வயது முதிர்ந்தவர் இல்லங்களுக்கு நேரில் சென்று பொருட்களை வழங்கிய துணை முதலமைச்சர்!