Tamilnadu

எழுத்தாளர்... இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி... நெல்லை சு.முத்து காலமானார்!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சு.முத்து. 1951 மே 10ஆம் தேதி பிறந்த இவர், இளம் வயதிலேயே கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தொடர்ந்து இவர் எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் நூல்கள் எழுத தொடங்கினார். இவர் எழுத்தாளர் மட்டுமின்றி ஸ்ரீஹரிகோட்டா சசிஷ்தவான் விண்வெளி மையத்தில் முதல்நிலை விஞ்ஞானியாக செயல்பட்டு வந்தார்

மேலும் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களுடன் பணியாற்றிய நெல்லை முத்து, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். அதுமட்டுமின்றி, சிறுவர் இலக்கியம், அறிவியல், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு, திறனாய்வு எனும் தலைப்புகளில் 70-க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக அறிவியல் சார்ந்து 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

மேலும், மலேசியாவின் உலகத் தமிழ் கவிஞர் பேரவையால் வழங்கப்பட்ட ‘கவிமாமணி’ விருதையும் பெற்றுள்ளார். ‘செவ்வாயில் உள்வேட்கையும் நல்வாய்ப்பும்” என்ற தலைப்பில் செவ்வாயைப் பற்றிய கிரேக்க இதிகாச புராணக்கதைகள் மற்றும் நவீன விஞ்ஞான வாய்ப்புகளைப் பற்றியும் 2004ஆம் ஆண்டிலேயே எழுதியுள்ளார். இவர் எழுதிய 4 புத்தகங்களுக்கு, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு மற்றும் சிறந்த நூலாசிரியர் என்ற விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

மேலும் இவரது “விண்வெளி 2057″ எனும் நூல், 2000ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல் எனும் வகைப்பாட்டில் பரிசை பெற்றுள்ளது. “ஐன்ஸ்டீனும் அண்டவெளியும்” எனும் நூல் 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு எனும் வகைப்பாட்டில் பரிசை பெற்றுள்ளது.

இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ நிறுவனத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்து வந்த நெல்லை முத்து, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனது 74-வது வயதில் காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திருவனந்தபுரத்தில் மறைந்த இவரது உடல், மதுரையில் இருக்கும் இவரது மகள் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, இறுதிச்சடங்குகள் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. விஞ்ஞானி நெல்லை முத்து மறைவு பலர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ”அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை விடும் பழனிசாமி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!