Tamilnadu

”உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதிக்கும் பா.ஜ.க” : தொல்.திருமாவளவன் MP குற்றச்சாட்டு!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை மகாராஷ்டிர பா.ஜ.க கூட்டணி அரசு அவமதித்துள்ளதாக வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் MP குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன் MP,” ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்கும் வகையில் குடியரசு தலைவரை கொண்டு பா.ஜ.க அரசியல் செய்யப் பார்க்கிறது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக குடியரசு தலைவரை கூட பாசிச பா.ஜ.க அரசு செயல்பட வைக்கிறது.

அரசமைப்பு சட்டத்தின் பாதுகாப்பு அரணே குடியரசு தலைவர் பதவிதான். ஆனால் அதை கேலிக்குள்ளாகும் வகையில் ஒன்றிய பா.ஜ.க அரசின் நடவடிக்கள் இருந்து வருகிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் எந்த மாநிலத்திற்கு சென்றாலும், அவரை அம்மாநில உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் சந்தித்து வரவேற்க வேண்டும் என்பது மரபு.

ஆனால் நீதிபதி கவாய் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்ற போது அந்த மாநிலத்தை சேர்ந்த காவல்துறை தலைமை இயக்குனர், அரசு தலைமைச் செயலாளர் ஆகியோர் முறைப்படி வரவேற்பு கொடுக்கவில்லை. இதை தலைமை நீதிபதியே வேதனையோடு கூறியுள்ளார். பாஜக அரசு தலித்துகளை எவ்வாறு நடத்துகிறது என்பதற்கு இது ஒரு சான்று.

தி.மு.க தலைமையிலான கூட்டணி தான் கூட்டணி வடிவத்தில் உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணி நிச்சயம் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும். அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தேர்தல் வரை தொடருமா? என்பதே சங்தேகம்தான்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”மன்னிப்பில் கூட உண்மைத்தன்மை இல்லை” : பா.ஜ.க அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!