Tamilnadu

”முதல்வர்களின் திலகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : கல்வியாளர்கள் பாராட்டு!

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன அதிகாரத்தை மீட்டுத்தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டும் வகையில் சென்னை ஜவகர்லால் நேரு உள் விளையாட்டரங்கில், மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில், ”காலை உணவு திட்டம், புதுமைப் பெண், நான் முதல்வன் என கல்விக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி, லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்க்காலத்திற்கு நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழிகாட்டி வருகிறார்” என சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் வரவேற்றுப் பேசினார்.

பின்னர் பேசிய மதுரை தியாகராசர் கல்வி குழுமம் நிர்வாக இயக்குனர் ஹரி.தியாகராஜன்,”சுதந்திர தினத்தன்று கோட்டையில் முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை போராடி பெற்று தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். இன்று அவரின் வழியிலே பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் என்ற அதிகாரத்தை மீட்டுத்தந்திருக்கிறார் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழின் மேம்பாடு, தமிழ் சமூக மேம்பாடு, கல்வி மேம்பாடு, தொழில் வளர்ச்சி, இளைஞர் முன்னேற்றம் பெண்கள் முன்னேற்றம் என அனைத்து துறைகளிலும் செயல் வீரராக முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வராக நமது முதலமைச்சர் இருக்கிறார். நடிகர்களில் திலகம் உண்டு. மக்களில் திலகம் உண்டு. இயக்குநர்களில் திலகம் உண்டு. ஆனால் முதல்வர்களில் திலகம் உண்டா? என்று கேட்டால் இதோ நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்று பெருமையாக கூறலாம்." என பாராட்டினார்.

இந்நிகழ்வில் நான் முதல்வன் திட்டத்தின் பயன்பெற்ற மாணவி அபித்துமணிஷா,”புதுமைப் பெண் திட்டத்தில் வழங்கப்படும் ரூ.1000 பணத்தைக் கொண்டு நான் தற்போது தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் தட்டச்சுப் பயின்று வருகிறேன். இப்படி என்னைப்போன்ற மாணவர்களுக்கு புதுமைப்பெண் திட்டம் பல வகையில் உதவி வருகிறது. இந்த திட்டத்தால் நான் மட்டுமல்ல எனக்கு பின்வரும் சந்ததியினரும் பயன்பெறுவார்கள்" என பெருமையுடன் கூறினார்.

Also Read: “பா.ஜ.க-வின் அச்சுறுத்தலை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம்” : கழக மா.செ கூட்டத்தில் முதலமைச்சர் அதிரடி!