Tamilnadu

சென்னை அருகே புதிய ஆறு வழிச்சாலை பணிகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் : சாலையின் விவரம் என்ன ?

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில் இன்று (1.5.2025) திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு கண்டிகையில் நடைபெற்ற நிகழச்சியில் சென்னை எல்லைச் சாலை திட்டத்தின் கீழ் திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் திருப்பெரும்புதூர் வரை 2,689.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30.10 கி.மீட்டர் நீளத்திற்கு கடினப்புருவத்துடன் கூடிய புதிய ஆறு வழிச்சாலை மற்றும் சாலையின் இருபுறமும் இரு வழித்தடத்தினை கொண்ட சேவைச் சாலை அமைத்தல் பணிகளை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டின் வடக்கு மற்றும் தென் மாவட்டங்கள், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து வரும் கனரக வாகனங்கள் எண்ணூர் மற்றும் காட்டுப் பள்ளி துறைமுகங்களுக்கு எளிதாக சென்றடையவும், கனரக வாகன போக்குவரத்தால் ஏற்படும் நெருக்கடியை குறைப்பதற்கும், வணிக மற்றும் தொழில் வளங்களை அதிகரிக்கவும் சென்னை எல்லை சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இச்சாலை எண்ணூர் துறைமுகத்திலிருந்து மகாபலிபுரம் வரை 132.87 கி.மீ. நீளத்திற்கு அமைக்கப்படவுள்ளது.

சென்னை எல்லை சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பிரிவு – 3 ன் கீழ் திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் திருப்பெரும்புதூர் வரை 30.10 கி.மீ நீளத்திற்கு புதிய ஆறுவழிச்சாலை மற்றும் இருவழி சேவைச்சாலை (இருபுறமும்) அமைக்க மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு, திருவள்ளூர் புறவழிச்சாலையிலிருந்து வெங்காத்தூர் வரை 10.40 கி.மீ நீளத்திற்கான சாலைப் பணிகள் 1,133.20 கோடி ரூபாய் மதிப்பீட்டுலும், வெங்காத்தூர் முதல் செங்காடு வரை 10.00 கி.மீ நீளத்திற்கான சாலைப் பணிகள் 593.27 கோடி ரூபாய் மதிப்பீட்டுலும், செங்காடு முதல் திருப்பெரும்புதூர் வரை 9.70 கி.மீ நீளத்திற்கான சாலைப் பணிகள் 963.27 கோடி ரூபாய் மதிப்பீட்டுலும் என மொத்தம் 30.10 கி.மீட்டர் சாலைப் பணிகள் 2,689.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இப்பணியில், 2 உயர்மட்ட மேம்பாலங்கள், 1 இரயில்வே மேம்பாலம் மற்றும் 2 பெரிய பாலங்கள் கட்டப்படவுள்ளன.மேலும் சென்னை எல்லை சாலைத் திட்டம் பிரிவு-1 ன் கீழ் எண்ணுார் துறைமுகத்தில் தொடங்கி தச்சூர் வரை 2,122.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25.40 கிலோ மீட்டர் நீளத்திற்கு செயல்படுத்தப்படுகிறது. பிரிவு-1 ன் கீழ் தற்போது வரை 35 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.

சென்னை எல்லை சாலைத் திட்டம் பிரிவு-2 ன் கீழ் தச்சூரில் தொடங்கி திருவள்ளூர் புறவழிச்சாலை வரை 1,539.69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 26.10 கிலோ மீட்டர் நீளத்திற்கு செயல்படுத்தப்படுகிறது. பிரிவு-2 ன் கீழ் தற்போது வரை 68 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.

சென்னை எல்லை சாலைத் திட்டம் பிரிவு – 4 ஆனது திருப்பெரும்புதுாரில் தொடங்கி சிங்கப்பெருமாள் கோயில் வரை 23.80 கி.மீ நீளம் கொண்டதாகும். இச்சாலை மாநில அரசின் செலவில் ஏற்கனவே ஆறு வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையை சென்னை எல்லை சாலைத் திட்டத்தின் தரத்திற்கு ஏற்ப உயர்த்தி நுழைவு கட்டுபடுத்தப்பட்ட சாலையாக அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை எல்லை சாலைத் திட்டம் பிரிவு – 5 ஆனது சிங்கப் பெருமாள் கோயில் முதல் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி சந்திப்பு வரை மொத்தம் 28.24 கி.மீ நீளம் அமைக்கப்படவுள்ளது. தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Also Read: மணிப்பூரில் குடியரசு தலைவர் ஆட்சியை நீக்க வேண்டும் : MLA-க்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் !