Tamilnadu

“முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

முன்னாள் சட்டமன்ற / மேலவை உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய மற்றும் மருத்துவப் படியினை உயர்த்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26-4-2025) ஆற்றிய உரை,

நம்முடைய துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி அவர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தைப் பற்றி இங்கே குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார். அதேபோன்று, உறுப்பினர் ஜெகன்மூர்த்தி அவர்களும் பேசுகிறபோது அதைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். 

ஆகவே, ஒட்டுமொத்தமாக பல சட்டமன்ற உறுப்பினர்கள் இதுகுறித்து என்னிடத்திலே கோரிக்கையும் வைத்திருக்கிறார்கள். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய அமைப்பைச் சார்ந்தவர்களும் என்னை வந்து நேரடியாகச் சந்தித்து இதுகுறித்து மனுவைத் தந்திருக்கிறார்கள்.

எனவே, அதையெல்லாம் பரிசீலித்துப் பார்த்து, முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய மாத ஓய்வூதிய 30 ஆயிரம் ரூபாய் என்பதை, 35 ஆயிரம் ரூபாயாக 1-4-2025 முதல் உயர்த்தி வழங்கப்படும். 

தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தைப் பொறுத்தவரையில், மாதம் 15 ஆயிரம் ரூபாய் என்பது, மாதமொன்றுக்கு 17,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 

முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது ஆண்டொன்றிற்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படி 75 ஆயிரம் ரூபாய் என்பது, ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். 

ஏற்கெனவே, இந்த ஆண்டின் மருத்துவப் படித் தொகை வழங்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள 25 ஆயிரம் ரூபாய், இதற்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு பின்னர் வழங்கப்படும் என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

Also Read: "தெளிந்த அறிவு இருக்குமானால், ஆர்.என்.ரவி இந்நேரம் ராஜினாமா செய்து வெளியேறி இருக்கவேண்டும்" - கி.வீரமணி !