Tamilnadu
நூற்றாண்டு பெருமை வாய்ந்த விக்டோரியா அரங்கம் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரும்-சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
சென்னை மாநகராட்சி சார்பில், ரிப்பன் மாளிகை அடுத்துள்ள விக்டோரியா பொது அரங்கம் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியில் 32.62 கோடி ரூபாய் மதிப்பில் தொன்மை மாறாமல் மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
விக்டோரியா ராணி ஆட்சியின் பொன் விழாவை நினைவு கூறும் வகையிலும் அமைக்கப்பட்ட இக்கட்டடம் ராபர்ட் சிசோல்ம் என்பவரால் இந்தோ சாரசெனிக் கட்டடக்கலையில் 1888ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த அரங்கில் நடைபெற்றுள்ளன.
சுதந்திரத்திற்கு பின் விக்டோரியா பொது அரங்கு உரிய பராமரிப்பின்றி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று வரலாற்று சிறப்பு மிக்க இந்த கட்டடத்தை அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து, பண்பாட்டு தளம் மற்றும் அருங்காட்சியகமாக மறுசீரமைக்கும் பணியினை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி பணிகளை தொடங்கியது.
அதன்படி பழுதடைந்த கட்டடங்களை சரி செய்வது, நிலநடுக்கம் மற்றும் இயற்கை சீற்றங்களை தாங்கும் வகையில் மறுசீரமைப்பு பணிகள், இரண்டு மாடி கொண்ட இக்கட்டடத்தின் பிரதானக் கூரைகள் மற்றும் கோபுரங்களில் நீர்புகாத படலம் அமைக்கப்பட்டு மங்களூர் ஓடுகள் பயன்படுத்தப்பட்டு சரி செய்யப்பட்டுள்ளது. விக்டோரிய அரங்கு கட்டத்தின் பழமை மாறாமல் ஏற்கனவே உபயோகிக்கப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டு மரப்பலகைகள் வைத்து சரி செய்யப்பட்டு வருகிறது.
முதல் தளம் அருங்காட்சியகமாகவும், இரண்டாம் தளம் பண்பாட்டு கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்ட அரங்கமாகவும் அமைக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜூன் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டில் விடுமுறை அறிவிப்பு… தேர்தல் நாளன்று பொது விடுமுறை.. வெளியான அரசாணை! - முழு விவரம் உள்ளே!
-
பிரம்மபுத்ராவில் சீனாவின் அணை : ஒன்றிய அரசின் எதிர் நடவடிக்கை என்ன? - டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி!
-
தமிழ்நாட்டு மக்களிடமிருந்து வசூலித்த நிதியை வழங்காமல் ஒன்றிய அரசு பாகுபாடு : பி.வில்சன் MP குற்றச்சாட்டு!
-
ரூ.80 ஆயிரம் கோடிக்கு எங்கே போவார்கள்? : அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை விமர்சித்த கி.வீரமணி!
-
“தேர்தல் பிரச்சாரத்திற்கு 48 மணிநேரம் முன்பே விண்ணப்பிக்க வேண்டும்!” : சென்னை தேர்தல் அதிகாரி விளக்கம்!