Tamilnadu

”மாநில அரசுகள் விளம்பரதாரர்கள் அல்ல” : ஒன்றிய அரசு மீது முதலமைச்சர் பினராயி விஜயன் தாக்கு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24- ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டையொட்டி இன்று ”கூட்டாட்சிக் கோட்பாடே இந்தியாவின் வலிமை” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முதலமைச்சர்கள் பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின், கர்நாடக அமைச்சர் கிருஷண பைரே கவுடா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கருத்தரங்கில் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன்,"கூட்டாட்சி தத்துவம் பாதுகாக்கப்படுவது மிகவும் முக்கியமானது ஆகவே அது குறித்து பேசுவதும் முக்கியமானது . 2000 ஆண்டின் தொடக்கத்தில் சர்க்காரியா குழுவை அமைத்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கப்பட்டது அதில் பல நல்ல முன் மொழிவுகள் இருந்தும் அவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கூட்டாட்சி தத்துவம் நிதி அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படைக் கட்டமைப்பு .ஒன்றிய அரசின் விளம்பரதாரர்கள் போல மாநில அரசுககள் செயல்பட இயலாது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரானது. GST வரியில் மாநிலங்களுக்கு உரிய நியாயம் கிடைப்பதில்லை. ஒன்றிய அரசின் தொடர் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

உயர்கல்வி மாநில அரசுகள் எதிர்கொள்ளும் மற்ற முக்கியமான பிரச்சினையாக உள்ளது. சங்பரிவார அமைப்புகள் உயர்கல்வி நிலையங்களில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த தொடங்குகின்றன. உயர் கல்வி அமைப்புகளுக்கு முறையான நிதி வழங்கப்படுவதில்லை. மாநில பல்கலைக்கழகங்களில் மாநில அரசோடு விவாதிக்காமல் துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

இப்படி மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகள் பா.ஜ.க அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. மாநில அரசுகளின் நிதி உரிமைகளை பறித்து, நிதி நெருக்கடியை உருவாக்கி ஏழை மக்களுக்கான திட்டங்களை அமுல்படுத்த விடாமல் செய்கிறது.ஏழை எளிய மக்களுக்கான நலத்திட்டங்களை இலவசங்கள் என கூறிவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெரும்பணக்காரர்களுக்கான சலுகைகளை அவசிய தேவைகள் என பா.ஜ.க அரசு பிரச்சாரம் செய்கிறது.

கூட்டாட்சி தத்துவம், ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இது போன்ற மாநாடுகள் பொதுமக்களுக்கான புரிதலை அதிகப்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”RSS-இன் கட்டளைப்படி செயல்படும் பிரதமர் மோடி” : CPM அகில இந்திய மாநாட்டில் பிரகாஷ் காரத் பேச்சு!