Tamilnadu

காவல்துறை மீது திட்டமிட்டு பழி.. பெண்களுக்கு அச்சுறுத்தல்... பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் துறையான விளையாட்டுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதற்கு முன்னதாக துணை முதலமைச்சர் பேச தொடங்கும் முன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காவல்துறை குறித்தும், சட்டம் ஒழுங்கு குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்தார். மேலும் முன்னறிவிப்பின்றி பேசுவதற்கு முயன்றார். இதனால் பேரவையில் அமளி ஏற்பட்டது. இப்படி அவை சபையை மீறி அதிமுகவினர் நடந்துகொண்டதால், அவர்களை ஒருநாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

இந்த சூழலில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இந்த சம்பவம் குறித்து பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசியது வருமாறு :

"அதிமுக ஆட்சியில் நடைபெற்ற குற்ற சம்பவ எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்த்தாலே எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும். தமிழ்நாட்டில் பல்வேறு தொழிற்சாலைகள் வந்து மக்களின் வாழ்க்கை மேம்பட்டு வருகிறது. இதையெல்லாம் கண்டு பொறாமை படும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கேடு என மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக ஆட்சி காலத்தில் பூஜ்ஜிய நேரத்தில் எழுப்பும் பிரச்சனைகளுக்கு அரை மணி நேரம் முன்னதாக தரப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் இன்று சட்டப்பேரவை தொடங்கும் போது எந்த பிரச்சனை என கூறாமல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என திட்டமிட்டு பிரச்சனையை உண்டாக்குவது. எதிர்கட்சிகளுக்கு உரிய நேரத்தை தருகிறார் முதலமைச்சர். சட்டப்பேரவையில் அரை மணி நேரத்திற்கு முன்னதாக பிரச்சனை என்ன கூறாமல் கேள்வியை எழுப்புவது எப்படி பதில் அளிக்க முடியும்.

காவலர் தோட்டத்தில் இருந்தபோது உறவினர்களுக்கும் காவலருக்கும் நடந்த பிரச்சினை, செயின் பறிப்பு குற்றவாளிகளை 3 மணி நேரத்தில் பிடித்தது காவல்துறை. காவல்துறையை திட்டமிட்டு அவமானப்படுத்துகிறார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி, பரமகுடி கலவரங்கள் நடைபெற்றது. தற்போது திமுக ஆட்சியில் கலவரங்கள் இல்லாமல் அமைதி பூங்காவாக உள்ளது தமிழ்நாடு. குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்கிறோம். சிவகங்கையில் மருத்துவர் கடத்தப்பட்டார் என்ற பொய்யான தகவலை கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. 49% பெண்கள் வேலைக்கு செல்லும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளதால் பெண்களுக்கு அச்சத்தை உண்டாக்கும் வகையில் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி.

காவல்துறை மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதால் தான் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குறங்களில் ஈடுபடுவோர் மீது புகார் அளிக்க பொதுமக்கள் முன்வருகின்றனர். திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளது." என்றார்.

Also Read: தென் மாநிலங்கள் மக்கள் தொகை மேலாண்மையில் கவனமாக இருக்க வேண்டும் - ஆந்திர முதலமைச்சர் எச்சரிக்கை !