Tamilnadu

“தமிழ்நாட்டின் தாயுமானவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : அமைச்சர் அன்பில் மகேஸ் நெகிழ்ச்சி!

ஒன்றிய பா.ஜ.க அரசு முன்மொழியும் மும்மொழிக் கொள்கை, தேசியக் கல்விக் கொள்கை உள்ளிட்ட திணிப்பு திட்டங்களை தமிழ்நாடு ஏற்காததன் விளைவாக, தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி கல்வி நிதியை தராமல், மற்ற மாநிலங்களுக்கு பிரித்தளித்தது ஒன்றிய அரசு.

இந்நிலையில், திணிப்பை தடுத்தால் நிதி பாரபட்சமா என்ற கண்டனத்துடன், மாணவர்களுக்கான கல்வி நிதியை மாநில அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழ்நாட்டின் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது X சமூக வலைதளப்பக்கத்தில், “தமிழ்நாட்டின் தலைமையாசிரியர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மாணவர்கள், ஆசிரியப் பெருமக்கள், பெற்றோர்களுடன் இணைந்து நன்றிகளை தெரிவித்தோம்.

தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை, PM Shri பள்ளிகள் போன்றவற்றை தமிழ்நாடு ஏற்காத காரணத்தால் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் நமக்கு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடியை தர மறுத்தது ஒன்றிய அரசு. இதன் காரணமாக இலட்சக்கணக்கான மாணவர்களும், ஆசிரியப் பெருமக்களும் பாதிக்கும் சூழல் உருவானது.

இந்நிலையில் ‘10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் கொள்கையை விட்டுத்தர மாட்டோம். ஒன்றிய அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை எனது தலைமையிலான மாநில அரசே வழங்கும்’ என அறிவித்தார் தமிழ்நாட்டின் தாயுமானவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதன்படி 2025-26 நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி வழங்கும் அறிவிப்பையும் வெளியிட்டார் முதலமைச்சர்.

எனவே ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோருடன் முதலமைச்சர் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டோம்” என பதிவிட்டுள்ளார்.

Also Read: "சாதிவாரி கணக்கெடுப்பு ஒன்றிய அரசோடு தொடர்புடையது" - மாநில அரசு நடத்தவேண்டும் என தொடர்ந்த மனு தள்ளுபடி !