Tamilnadu
மீனவர்கள் விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் - வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்களை 18.03.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுத்திட வலுவான தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், 2025 ஆம் ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படும் பத்தாவது சம்பவத்தை மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 17.03.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை, அவர்களது மீன்பிடி விசைப்படகுடன் 18.03.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதை வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவை என்று பலமுறை தான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட போதிலும், இதுபோன்ற கவலையளிக்கக்கூடிய சம்பவங்களின் எண்ணிக்கை தொய்வின்றி தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மீன்பிடித் தொழிலையே பெரிதும் நம்பியுள்ளதையும், இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி இதுபோன்று சிறைபிடிக்கப்படுவதால், அவர்களது குடும்பத்தினர் வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தமிழ்நாட்டு மீனவர்கள் மேலும் கைது செய்யப்படாமல் தடுக்கவும், இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 110 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலுவான தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
Also Read
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!