Tamilnadu

”இதில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை” : அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு - மாநில உரிமையை காப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் 58 கட்சிகள் பங்கேற்றனர். மேலும் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிரான தீர்மானங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு,” மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதி அளித்தார்.அதுபோலவே, தற்போதும் இந்த வரையறை 2026-இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் மோடியும் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்.

மேலும் மிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய "கூட்டு நடவடிக்கைக் குழு" ஒன்றை அமைத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானங்களை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளன. இதில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை. முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் நலன் சார்ந்தும்,மாநில உரிமைகளை காக்கவும் இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

Also Read: “இந்தியாவை ‘ஹிந்தியா’வாக மாற்றத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசு...” - அனைத்துக் கட்சி கூட்டத்தில் கமல்ஹாசன்!