Tamilnadu

இந்தியாவிலேயே முனைவர் படிப்புகளில் தமிழ்நாடு முதலிடம் - உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பெருமிதம்!

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அணியாப்பூர், வையம்பட்டி, புத்தானத்தம், பண்ணபட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள சில கிராமங்களில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது. இந்த திட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவை.செழியன் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை பெற்றதோடு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த முறை உயர்கல்வித்துறைக்கு 8250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தியாவிலேயே உயர்கல்வியைப் பொறுத்தவரை தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. இதற்கு காரணம் முதலமைச்சர்கள் கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகியோர்தான்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு வெளியான ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் முனைவர் படிப்பு உள்ளிட்ட ஆராய்ச்சி படிப்புகளில் தமிழ்நாட்டில்தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து, புதிய பாடப்பிரிவுகள், புதிய கல்லூரிகளை உருவாக்கி உயர்கல்வியை இன்னும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்வோம்.

இதே போல நீட் தேர்வை பொறுத்தவரை நீட் வேண்டாம் என தமிழக அரசு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய பிறகும், ஒன்றிய அரசு அதை நிறைவேற்றியே தீருவோம் என்று விடாப்பிடியாக இருந்து கொண்டிருக்கின்றது. மருத்துவத்தில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில், தமிழக அரசு கொண்டு வந்த கல்லூரிகளில் வடநாட்டுகாரர்களை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட வட ஆதிக்க செயல்தான் இந்த நீட் தேர்வு. அது ரத்தசெய்யப்பட வேண்டும்"என்று கூறினார்.

Also Read: “முதல்வர் மருந்தகம்” திட்டம் : 8 நாட்களில் 50,053 பேர் பயனடைந்ததாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு !