Tamilnadu

“குகேஷின் வெற்றியினால் தமிழ்நாடு பெருமை கொள்கிறது” : முதலமைச்சர், துணை முதலமைச்சர் புகழாரம்!

உலக அளவிலான செஸ் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இந்திய வீரர்கள் இருந்து வருகின்றனர். எனினும், விஸ்வநாத ஆனந்திற்கு அடுத்து இந்தியாவைச் சேர்ந்தவர் ஒருவர் உலக செஸ் சாம்பியன் பட்டம் வெல்வது என்பது மட்டும் நீண்டகால காத்திருப்பாக இருந்தது.

இந்நிலையில் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரில் 14 சுற்றுகள் முடிவில் 7.5 புள்ளிகளுடன் குகேஷ் முன்னிலை வகித்து, உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றெடுத்துள்ளார்.

இதனால், உலக செஸ் சாம்பியன் ஆன இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் குகேஷ். இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த குகேஷ், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் என்பது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது x வலைதளப் பக்கத்தில், “உலகத் தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்கியதன் மூலம் உலக செஸ் தலைநகராக சென்னை இருப்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. குகேஷின் வெற்றியினால் தமிழ்நாடு பெருமை கொள்கிறது” என பதிவிட்டுள்ளார்.

துணை முதலமைச்சரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், “உங்கள் வெற்றி நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் கவனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இவ்வளவு இளம் வயதிலேயே இப்படிப்பட்ட அசாதாரண திறமையைக் கண்டது உண்மையிலேயே உத்வேகம் அளிக்கிறது. இன்னும் பிரகாசியுங்கள் சாம்பியன்” என நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Also Read: உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்றார் தமிழ்நாட்டு வீரர் குகேஷ்! : “கனவு நினைவானது” என குகேஷ் நெகிழ்ச்சி!