Tamilnadu

ஃபெஞ்சல் புயல் : பாதிக்கப்பட்ட இடங்களுக்கு திமுக சார்பில் 150 டன் நிவாரண பொருள்கள் அனுப்பி வைப்பு !

தமிழ்நாட்டில் கடந்த நவ.30 முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது.

இதுவரை இல்லாத அளவுக்கு வட மாவட்டங்களில் கடும் மழை ஏற்பட்டு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசு மேற்கொண்டதால் பெருமளவு சேதத்தில் இருந்து மாவட்டங்கள் தப்பித்தது. எனினும் வடமாவட்டங்களில் பெரும்பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.

மேலும் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பாலங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், பொதுக் கட்டடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன

இந்த நிலையில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், சென்னை சென்னை தெற்கு மாவட்டத்தின் சார்பில் தெற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மா.சுப்பிரமணியம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.

அதன்படி திமுக சார்பில் வழங்கப்பட்டுள்ள 150 டன் நிவாரண பொருள்களை கொண்டு செல்லும் வாகனங்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.கொடியசைத்து அனுப்பி வைத்தார். இந்த பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கே இன்றே வழங்கப்படவுள்ளன.

Also Read: வயநாடு நிலச்சரிவுக்கு நிவாரணம் வழங்காத ஒன்றிய அரசு: கேரளாவில் இடதுசாரி கட்சிகள் சார்பில் இன்று போராட்டம்!