Tamilnadu

6 லட்ச பெண் தொழில் முனைவோர்களின் நிறுவனங்கள் பதிவு : இந்தியாவிலேயே 2-வது இடத்தை பிடித்து தமிழ்நாடு சாதனை!

திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் 6,22,373 பெண் தொழில் முனைவோர்களின் நிறுவனங்களைப் பதிவுசெய்து இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தைப் பெற்று தமிழ்நாடு சாதனைப் படைத்துள்ளது.

இதுகுறித்து மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

பெண்களைச் சமூக பொருளாதாரச் சுதந்திரமுடையவர்களாக உயர்த்துவது சமூகநீதி அரசியலின் மிக அடிப்படையான நோக்கமாகும். அதனடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு பெண்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான பல்வேறு திட்டங்களைத் நமது திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது.

சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைப் (MSME) பதிவு செய்வதற்கான “உத்யம்” தளத்தில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, 2021-22ஆம் ஆண்டில் 1,27,316 பேரும் 2022-23 ஆம் ஆண்டில் 2,01,715 பேரும் 2023-24ஆம் ஆண்டில் 2,93,342 பேரும் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் மொத்தமாக கடந்த மூன்றாண்டுகளில் 6,22,373 பெண் தொழில் முனைவோர்களின் நிறுவனங்களைப் பதிவுசெய்து இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தைப் பெற்று தமிழ்நாடு சாதனைப் படைத்துள்ளது.

‘மகளிர் விடியல் பயணம்’ ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’, ‘புதுமைப் பெண்’ போன்ற மகளிருக்கான திட்டங்களின் வழியில் பெண் தொழில் முனைவோருக்கான சிறப்பு நடவடிக்கைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.

‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்குத் தொடர்ந்து தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகள்; புத்தொழிலை (Startup) ஊக்குவிப்பதற்கான மானியத்துடன் கூடிய ‘TANSEED’ திட்டத்தின் கீழ் பெண் தொழில் முனைவோருக்குச் சிறப்புத் தொகுப்புகள் போன்ற பெண் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு நடவடிக்கைகளால் இச்சாதனை சாத்தியப்பட்டிருக்கிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழிவகுத்த பாதையில், மகளிர் முன்னேற்றமே சமுதாயத்தை முன்னேற்ற அடிப்படை என்பதை உணர்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களுக்கு சொத்துரிமை, கல்வி உரிமை, தொழில் செய்யும் உரிமை போன்றவற்றை வழங்கி, தொழில் சார்ந்த விவரங்களை கற்பிப்பதுடன் அவர்களின் வாக்கை நிலையை உயர்த்தி, அவர்களைச் சுதந்திரமானவர்களாகவும், பொருளாதார தற்சார்புடையவர்களாகவும் மாற்றி பாலினச் சமத்துவத்தை உறுதிப்படுத்தி, மகளிரின் வெற்றிப்பயணத்தை திராவிட மாடல் அரசின் வழியாக தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Also Read: ”தமிழ்நாட்டிற்கு ரூ.2000 கோடி நிதி உடனே தேவை” : மக்களவையில் கனிமொழி MP வலியுறுத்தல்!