Tamilnadu

“முழுவீச்சில் நிவாரணப் பணிகள் நடைபெறுகிறது” - ஆய்வுக்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி !

ஃபெஞ்சல் புயலின் தாக்கம் காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இன்று மாலை ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கவுள்ள நிலையில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரக் கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “ நேற்று இரவு முதல் கன மழை பெய்து வரும் நிலையில், புயல் இன்று இரவு கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கட்டுப்பாட்டு மையத்தை தற்போது ஆய்வு செய்துள்ளேன்.

இங்கு சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ,செங்கல்பட்டு ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மழை நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்த மக்கள் நிவாரண முகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, மேலும் நிவாரண பணிகளை முழுவீச்சில் நடைபெற உத்தரவிட்டுள்ளேன்.

பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தாழ்வான பகுதிகளில் இதுவரை தண்ணீர் எங்கும் தேங்கவில்லை” என தெரிவித்தார்

Also Read: ஃபெஞ்சல் புயல், கனமழை : பொதுமக்கள் சேவைக்காக வழக்கம்போல இயங்கும் மாநகர அரசுப் பேருந்துகள் !