Tamilnadu
கொட்டித் தீர்க்கும் கன மழை : சுற்றிச் சுழன்று மக்கள் பணியாற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.10.2024) சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற வானிலை மைய எச்சரிக்கையைத் தொடர்ந்து, மழை பெய்து வரும் நிலையில், வடசென்னை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையொட்டி கனமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 30.9.2024 மற்றும் 14.10.2024 ஆகிய தேதிகளில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, கனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு துறைகள் மூலம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு உயர் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று நள்ளிரவு கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில், மயிலாப்பூர், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்றிடவும், மழைப்பொழிவை முறையாக கண்காணித்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர், இன்று (15.10.2024) காலை பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையம் மற்றும் எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, நேற்றிரவு முதல் தொடர்மழை பெய்துவரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (15.10.2024) யானைக்கவுனி கால்வாயில் மழைநீர் தடையின்றி சென்றிட மழைநீரில் அடித்துவரப்படும் கழிவுகளை JCB இயந்திரம் மூலம் உடனுக்குடன் அகற்றும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து பேசின் மேம்பாலத்திலிருந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், காந்தி கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் சேரும் இடமான பக்கிங்ஹாம் கால்வாயில் மழைநீர் தடையின்றி செல்கிறதா என்பதை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பின்னர், முதலமைச்சர் அவர்கள் டிமெல்லோஸ் சாலையில், அதிகமாக மழைநீர் தேங்கும் இடங்களான கே.எம். கார்டன் மற்றும் புளியந்தோப்பு பகுதிகளில் சேரும் மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, புளியந்தோப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது, அங்கு பணி மேற்கொண்டிருந்த பெருநகர சென்னை மாநகராட்சி முன்களப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துரையாடி, அருகிலிருந்த தேநீர் கடைக்கு அவர்களை அழைத்துச் சென்று தேநீர் அருந்தினார்.
பின்னர், ஸ்டீபன்சன் சாலையில் உள்ள மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மோட்டார் பம்புகள் மூலம் பெரம்பூர் பிரதான சாலை பகுதிகளில் தேங்கும் மழைநீரை ஓட்டேரி நல்லா கால்வாய்க்கு சென்றடைவதை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, ஓட்டேரி நல்லா கால்வாயில் மழைநீர் தடையின்றி செல்வதை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்த பின், அங்கு பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தேநீர் மற்றும் பிஸ்கட்களை வழங்கினார்.
Also Read
-
“வீடியோலாம் எடுக்க கூடாது...” - தேர்தல் அலுவலரை தடுத்த தஞ்சை பாஜக நிர்வாகி... அதிரடி காட்டிய போலீஸ்!
-
“நாங்கள் கொள்கையில் நீடித்து வருகிறோம்...” - CPIM மாநில செயலாளர் சண்முகம் அதிரடி!
-
5 மாநில தேர்தல் முடிந்தவுடன் இது நடக்கும் : பா.ஜ.க அரசின் திட்டம் - ராகுல் காந்தி எச்சரிக்கை!
-
பா.ஜ.க ஆளும் அரியானாவில் 3 வயது சிறுமி வன்கொடுமை : உச்சநீதிமன்றம் தலையிட்ட பின் குற்றவாளிகள் கைது!
-
நடமாடும் மருத்துவ சேவை : இதிலும் இந்தியாவிற்கே வழிகாட்டும் தமிழ்நாடு!