Tamilnadu

”நாட்டை தவறாக வழிநடத்தப் பார்க்கும் பிரதமர் மோடி” : ராகுல் காந்தி MP கடும் தாக்கு!

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகக் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல்காந்தி எம்.பி மைசூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி வருகை புரிந்தார் தொழிலாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

பின்னர் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து கூடலூரில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ராகுல் காந்தி, " நான் தமிழ்நாட்டிற்கு வருவதும், தமிழ்நாட்டு மக்களை சந்திப்பதும் மகிழ்ச்சியாக உள்ளது. நாம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்து நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். நம்முடைய பிரதமர் ஒரு நாடு, ஒரு தலைவர், ஒரு மொழி என்று தவறாக இந்த நாட்டை வழிநடத்தப் பார்க்கிறார்.

இந்த நாட்டில் பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு உணர்வுகளைக் கொண்ட மக்கள் வாழும் நாடு என்பதை மறந்துவிட்டு அவர்கள் செயல்படுகிறார்கள். எந்த மொழியும் எந்த ஆதிகத்தையும் செலுத்துவதை நாம் அனுமதிக்க மாட்டோம். அதை நான் அனுமதிக்க மாட்டேன். நமது பாரத பிரதமர் நமது நாட்டின் பன்முக தன்மையை மதிக்க மறுக்கிறார்.

நமது நாடு ஒரு மொழி ஒரு நாடு என்பது அல்ல பல்வேறு மொழி பல்வேறு மக்களை உள்ளடக்கிய நாடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பல்வேறு மொழி பல்வேறு இனம் ஆகியவற்றைக் கொண்டு வாழ்ந்து வருகிறோம். பல்வேறு ஒற்றுமைகளுடன் வாழ்வதுதான் நமது இந்திய நாடு.

பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கும் எந்த திட்டமும் மக்களுக்கான திட்டம் இல்லை. பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை குறித்து பா.ஜ.க அறிக்கையில் இடம் பெறவில்லை. ஆனால் காங்கிரஸ் அறிக்கையில் இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கு ஆண்டிற்குப் பயிற்சிக் கட்டணமாக ஒரு லட்ச ரூபாய் தருகிறோம் எனவும், அக்னிவீர் திட்டம் தவறான திட்டம். அதை மாற்றி அமைக்கப் போகிறோம்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”அரசியல் சாசனத்திற்கு ஆபத்து என்பது அனைவரது உயிருக்கும் ஆபத்தாகும்” : முதல்வர் சித்தராமையா எச்சரிக்கை!