Tamilnadu

”தேர்தல் பத்திர ஊழல் குறித்து வாய் திறப்பாரா அண்ணாமலை?” : செல்வப் பெருந்தகை கேள்வி!

இந்தியா கூட்டணி தலைமையில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய செல்வப் பெருந்தகை,"மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்திய நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மக்கள் அனைவரும் அச்சுறுத்தப்படுகிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குப் பாதுகாப்பு இல்லை. பெண்கள், குழந்தைகளுக்குக்கூடப் பாதுகாப்பு இல்லை. உலகில் எங்குமே நடக்காத ஊழல் தேர்தல் பத்திரம் ஊழல் என்று ஒன்றிய நிதியமைச்சரின் கணவரே விமர்சித்துள்ளார். பா.ஜ.கவின் திட்டங்கள் அனைத்திலும் ஊழல் நடந்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் மோடி தேர்தல் பத்திர ஊழல் குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன்?. அதேபோல் எதற்கு எடுத்தாலும் கத்திக் கொண்டே இருக்கும் அண்ணாமலை தேர்தல் பத்திர ஊழல் தொடர்பான வாய் திறப்பாரா?

தமிழ்நாட்டின் உரிமைகளை ஒன்றிய பா.ஜ.க அரசிடம் அடகு வைத்த கூட்டம் அ.தி.மு.க. தமிழ்நாட்டின் நலன்களை விட்டுக் கொடுத்தவர்கள் இவர்கள். இந்த தேர்தலில் இவர்களை நாம் தூக்கியெறிய வேண்டும்.

தமிழ்நாட்டை எப்போதும் பா.ஜ.க அரசு புறக்கணித்துக் கொண்டேதான் வருகிறது. ஆனால் தமிழ்நாடு அரசு கடும் நிதிச்சுமையில் கூட மக்களுக்கான பல திட்டங்களைச் செய்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டம். காலை உணவு திட்டம் என திராவிட மாடல் அரசின் திட்டங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்" என தெரிவித்துள்ளார்.

Also Read: மதுபான வழக்கு : டெல்லி முதல்வர் கைதை தொடர்ந்து அமைச்சருக்குக் சம்மன் அனுப்பிய ED - குவியும் கண்டனங்கள்!