Tamilnadu

முதலமைச்சர் அறிவித்த 2 நாளில் தொடங்கிய வீடு கட்டும் பணி: நன்றி தெரிவித்த பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை!

முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாயி அவர்களிடம் கடந்த 2000-ஆம் ஆண்டில் “ஸ்த்ரிசக்தி” புரஸ்கார் விருது பெற்றவர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை. அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் தனக்கு வீடு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை என்று வேதனையுடன் தெரிவித்து இருந்தார்.

அதனைத் தொடர்ந்து இதனை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை அவர்களுக்கு புதியதாக வீடு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட்டார்.

பின்னர், பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை அவர்களுக்கு ஏற்கெனவே அரசால் வழங்கப்பட்டுள்ள ஒரு செண்ட் வீட்டு மனையுடன் பில்லுச்சேரி ஊராட்சி, திருவிழாப்பட்டி கிராமத்தில் கூடுதலாக 380 சதுர அடி நிலத்திற்கான பட்டா முதலமைச்சர் அறிவித்த ஒரு மணி நேரத்தில் வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பத்மஸ்ரீ திருமதி சின்னப் பிள்ளை அவர்களுக்குப் புதிய வீடு வழங்கப்படுகிறது. வீடு கட்டும் பணி இந்த மாதமே தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு நாட்களில் நேற்று வீடு கட்டும் பணி துவக்கி வைவைக்கப்பட்டது.

தொடர்ந்து சின்னப்பிள்ளை அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, நீண்ட காலம் போராடிய நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்த ஒரு மணி நேரத்தில் தன்னிடம் பட்டா வழங்கியதையும் தொடர்ந்து இரு தினங்களில் வீடு கட்டும் பணியை துவக்கியுள்ளதற்கும் முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி நன்றி என்று தெரிவித்தார்.

Also Read: CAA சட்டம்: “யூதர்களுக்கு இஸ்ரேல் போல, இந்துக்களுக்கு மட்டும் இந்தியா என்பதை உருவாக்கும்” - வைகோ கண்டனம்!