Tamilnadu

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் தண்டனை நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு- மீண்டும் MLA- ஆக வாய்ப்பு!

கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது பொன்முடி மற்றும் அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.

அதனைத் தொடர்ந்து அந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி, சிறப்பு நீதிமன்றம் பொன்முடி மற்றும் அவரின் மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2017ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி, பொன்முடி மற்றும் அவரின் மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 50 லட்சமும் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரின் எம்.எல்.ஏ பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டது.

இதனிடையே சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொன்முடி மற்றும் அவரின் மனைவி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,, பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரும் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும், அவர் குற்றவாளி என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதால் பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ-வாக பொறுப்பேற்க மீண்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம், தனக்கு எதிரான தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தான் குற்றமற்றவர் என்றிருப்பதால் தனது எம்.எல்.ஏ பதவியை மீட்டு தருமாறு முன்னாள் அமைச்சர் பொன்முடி தமிழ்நாடு சட்டசபை செயலகத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: "மோடி ஒரே ஒருமுறை மணிப்பூருக்குச் செல்லுங்கள்" - மணிப்பூரை சேர்ந்த மல்யுத்த வீரர் கோரிக்கை !